சீனுக்கு வந்த எச்.ராஜா.. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. ஒரு வழி இருக்கு பாஸ்.. கொடுத்த ஐடியா
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டுவதுதான் ஒரே வழி என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டுவதுதான் ஒரே வழி. அதைத்தவிர வேறு இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். மேலும், ஆளுநரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் திமுகவை எச்.ராஜா சாடினார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று ஆளுநர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் தடை மசோதா விவகாரம் குறித்து பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திமுகவை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக எச்.ராஜா பேசியதாவது:-

வீண் மோதல்கள் தான் வரும்
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சட்டத்தில் முரண்பாடு வந்தால் மத்திய அரசு சட்டம் தான் செல்லுபடியாகும். இதுதான் அரசியல் அமைப்பில் உள்ளது. இதை கடைபிடிக்கவில்லையென்றால் வீண் மோதல்கள்தான் வரும்.ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து சொல்லிவிட்டு நான் சட்ட விஷயங்கள் குறித்து சொல்கிறேன். திமுக முதலில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டம் 6 மாதம் தான் இருக்கும் எனவே ஆளுநர் உடனே ஒப்புதல் கொடுத்து விட்டார்.

அவசர சட்டம் எதற்கு கொண்டு வருகிறோம்
ஆனால் அவசர சட்டத்திற்கும் மசோதா கொண்டு வந்ததற்கும் இடையே ஒன்றரை மாதங்கள் இருந்தது. எத்தனை பேரை கைது செய்தீர்கள். என்ன விளையாட்டு? இது அரசாங்கமா? சிறுபிள்ளைத்தனமா? அவசர சட்டம் எதற்கு கொண்டு வருகிறோம். அவசர சட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒருவரையாவது கைது செய்ததா? இவர்களுடைய நோக்கம் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது இல்லை. ஆளுநருடனும் மத்திய அரசுடன் வம்பிழுக்கும் நோக்கத்திற்காக அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

தெளிவாக அனுப்பியிருக்கிறார்
ஆளுநர் இந்த வம்பிற்கு இடம் கொடுக்காமல் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்டார். ஆனால், இன்று தெளிவாக அனுப்பியிருக்கிறார். சைபைர் கிரைம் தொடர்பான விஷயங்களில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு தான் அதிகாரம் உள்ளது. பொதுவான பட்டியலில் இருந்தால் மாநில அரசு கொண்டு வரலாம். ஆனால், சைபர் கிரைம் மத்திய பட்டியலில் உள்ளது. அதனால் சட்டத்தை இயற்ற முடியாது என்று திருப்பி அனுப்பி விடுகிறார். இது சட்ட ரீதியான நிலைப்பாடு.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
நீங்க திருப்பி மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்புவார். ஜனாதிபதி சட்டக்குழுவிற்கு அனுப்புவார் அல்லது உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கலாம். உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தாமல் இதற்கு நாம் ஒப்புதல் கொடுக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் அரசியல் அமைப்பு நிலையின் படி மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தெளிவாக சொல்கிறார். ஆனால், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிகாரம் இருப்பதாக சொல்கிறார். உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டுவதுதான் ஒரே வழி. அதைத்தவிர வேறு இல்லை.

வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது. ராணுவ வீரரை உங்கள் கட்சியை (திமுக) சேர்ந்தவர் அடித்துக் கொல்கிறார். ஒரு வருத்தம் தெரிவித்தாரா.. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காதும் இல்லை..வாயும் இல்லை. ஏனென்றால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி அழுவது காதில் விழவில்லை. ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. முதல்வர் அவரது தகுதியை மீறி ஆளுநருக்கு வாய்தான் இருக்கிறது. காது இல்லை என்கிறார்.

எந்த அமைச்சரவாது..
தமிழகத்தில் தினம் தோறும் கொலைகள் நடக்கின்றன். செயின் பறிப்பு அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எந்த அமைச்சரவாது அவர்களது வேலையை செய்கிறார்களா? அதிமுக பாஜக உறவை பொறுத்தவரை தலைவரும் தலைவரும் மோதிக்கொண்டால் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். கீழே இருப்பவர்கள் பேசினால் அது கருத்துரிமை. அதனால், அதில் ஒன்றும் இல்லை. பாஜக பற்றி பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமியே சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications