வடக்கு - தெற்கு இடையிலான போர் அல்ல.. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.. டிகே சிவக்குமார்!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு எதிரான கூட்டம் என்பது வடக்கு - தெற்கு இடையிலான போர் கிடையாது என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று கூறிய டிகே சிவக்குமார், தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்களவை தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட 3 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்.

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர்த்து திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றுள்ளன. ஆந்திராவில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பிரதிநிதி பங்கேற்று இருக்கிறார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இல்லாதவர்களாக மாறுவோம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் பேசுகையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம். மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்த ஆண்டே கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையாக இருக்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் என்பது வடக்கு, தெற்கு இடையிலான மோதல் அல்ல. அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கு திரண்டுள்ள நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். இங்கு ஒன்றிணைந்திருப்பது தொடக்கம் மட்டும்தான். திட்டங்களை வகுப்பது, முன்னேற்றம், ஒன்றிணைந்து செயல்படுவதே வெற்றிக்கான வழியாகும்.
மீண்டும் சொல்கிறேன்.. இது வடக்கு - தெற்கு இடையிலான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications