'சீக்கிரம் வாங்க.. இறைவனை பிரார்த்திக்கிறேன்..' ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஈபிஎஸ் ட்வீட்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கிராமத்துக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளதால், அண்ணாத்த படத்தின் மீது மிகப் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி தினத்தன்று வெளியாகும், அண்ணாத்த படத்தைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சில இடங்களில் படத்தின் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அவை மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது.

உடல்நிலை பாதிப்பு
இந்தச் சூழலில் ரஜினிகாந்த்திற்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாகக் கடந்த அக். 28ஆம் தேதி அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார். இருப்பினும், ரஜினிகாந்த்துக்கு இரவு முழுவதும் ஐ.சி.யு-இல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

காவிரி மருத்துவமனை
இதனிடையே ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க அவருக்கு மறுசுழற்சி சிகிச்சை அக். 29ஆம் தேதி வெற்றிகரமாகச் செய்யப்பட்டதாகக் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று கூறப்பட்டது. ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் முழுமையான குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அதில் கூறப்பட்டிருந்தது.

ஈபிஎஸ் ட்வீட்
இந்நிலையில், ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications