எடப்பாடிக்கு செக்.. அதிமுக அலுவலகத்தில் யாரையும் அனுமதிக்க கூடாது.. டிஜிபியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட எந்த நிர்வாகிகளையும் அனுமதிக்கக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழு நடந்த அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஓபிஎஸ் தரப்புக்கும் இபிஎஸ் தரப்புக்கும் நடந்த வன்முறையில் அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சிபிசிஐடி
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் வங்கிக் கணக்குகளை கையாளும் உரிமையை வங்கி நிர்வாகம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியது. அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.

அதிமுக தலைமை அலுவலகம்
எனினும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்ல நீதிமன்றம் ஒரு மாதம் தடை விதித்தது. இந்த தடை முடியும் தருவாயில்தான் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எனினும் ஓபிஎஸ்ஸோ எடப்பாடி பழனிசாமியோ தலைமை அலுவலகத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஜூலை 11 பொதுக் குழுசெல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதன் மீது கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர்.

தலைமை அலுவலகம்
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதாக அறிவித்துள்ளார். அதாவது ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறைக்கு பிறகு முதல்முறையாக அவர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்வதாக அறிவித்துள்ளார்.

தலைமை அலுவலகம் செல்ல எடப்பாடிக்கு செக்
ஆனால் அதிமுக அலுவலகத்தில் யாரையும் அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆன்லைன் மூலமாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் யாரையும் அனுமதிக்கக் கூடாது என புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும கேவியட் மனு தாக்கல் செய்து செக் வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications