பாஜகவுடன் பேரம்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததற்குப் பின் இதுதான் காரணம்.. ஓபிஎஸ் கணக்கு என்ன?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 24 மணி நேரத்திற்குள் 3 முறை சந்தித்ததன் காரணம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வருகிறது. பாஜக உடனான பேரத்தை அதிகரிக்கவே திமுகவை நாடி இருப்பதாகவும் கூறப்படுவதோடு, தனக்கு அரசியலில் இன்னும் எதிர்காலம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த சந்திப்பை நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாஜக தரப்பிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதே அவரது ஆதரவாளர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ் பக்கம் இல்லை. அதிமுக உடனான கூட்டணி அமைந்த பின், பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் தரப்பை சாதாரணமாக நடத்தினர். தமிழ்நாடு வந்த மோடியும் கூட ஓபிஎஸை சந்திக்கவில்லை.
இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் காலையில் முதல்வர் ஸ்டாலினை நடைப்பயிற்சியின் போது ஓபிஎஸ் சந்தித்தார். அதன்பின் மாலை மீண்டும் வீட்டிற்குச் சென்று ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின் மீண்டும் நடைப்பயிற்சியின் போது சந்தித்தார்.
24 மணி நேரத்தில் ஸ்டாலினை 3 முறை ஓபிஎஸ் சந்தித்தது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும், இன்னொரு பக்கம் திமுகவோடு கூட்டணி வைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததற்குப் பின்னணியில் வேறு சில காரணங்கள் ஓபிஎஸ் தரப்புக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
பாஜக உடனான தனது பேரத்தை அதிகரிக்கவே ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. ஏனென்றால் தர்மயுத்தம் தொடங்கிய பின், ஓபிஎஸ் இதுவரை அதிமுகவை நேரடியாக எந்தக் களத்திலும் எதிர்கொள்ளவில்லை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால், ஓபிஎஸ் அழுத்தம் கொடுக்க புதிய வழிகளை ஆராய வேண்டி இருந்தது.
அதற்கான வழியாகவே திமுகவை ஓபிஎஸ் சந்தித்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக பாஜகவிடம் தனது பேரத்தை ஓபிஎஸ் அதிகரிக்க முடியும். அதேபோல் தன்னை ஆதரிக்கவில்லை என்றால், தென் மாவட்டங்களில் வாக்குகளைப் பிரிக்கவும் தயங்க மாட்டேன் என்றும் வார்னிங் கொடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications