இந்த பேச்சை எடுத்தால் “அந்த முடிவுதான்”.. நோ சமாதானம்.. சீறிய ஓபிஎஸ் - கையை பிசையும் எடப்பாடி!
சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் சாமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் சார்பாக தன்னிடம் பேச வருபவர்களிடம், ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்படும் என்றால் பொதுக்குழுவை ஒத்திவைக்கும் முயற்சிகளை மேற்கொள்வேன் என ஓபிஎஸ் மிரட்டுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஒற்றைத் தலைமை பிரச்சனை
அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதம் எழுந்தது. மாவட்ட செயலாளர்கள் பலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசியதும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சூடாக்கியுள்ளது.

ஆதரவாளர்களுடன்
இதைத்தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவருமே தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து சிலரும் வந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரத்தக்களறியான கூட்டம்
நேற்று மீண்டும் அதிமுக அலுவலகத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தின்போது அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் ஒரு பிரிவினரால் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடியுடன் சந்திப்பு
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்த தம்பிதுரை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அப்போதும், கட்சியில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை குரலுக்கு மதிப்பு கொடுத்து ஓ.பி.எஸ்ஸும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓ.பி.எஸ் உடன்பட மறுத்துள்ளார்.

செங்கோட்டையன்
அதேபோல, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது இருவரும் சுமார் இருபது நிமிடங்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

சமாதான முயற்சிகள்
ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளுமாறு ஓ.பன்னிர்செல்வத்துடன் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்றும் பேசி வருகின்றனர். இருவருக்கும் பொதுவான சிலரும், ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிரட்டும் தொனியில் ஓ.பி.எஸ்
ஆனால், ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்துபவர்களிடம், இரட்டைத் தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க நேரிடும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமாதானம் பேச வந்தவர்கள் கையைப் பிசைந்தபடி சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications