கூட்டத்தில் வழக்கத்தை விட அதிக வரவேற்பு.. அரசியல் கட்சிகளால் அதிகம் கவனிக்கப்பட்ட ஓபிஎஸ் பேச்சு
சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் அதிமுக நிர்வாகிகள்,உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினர்.
மற்ற கூட்டங்களைவிட இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திறகு வரவேற்பு பெரிய அளவில் இருந்தது. இன்றைய கூட்டத்தில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் கட்சிகளிடம் அதிகம் இருந்தது.
இதேபோல் அதிமுக நிர்வாகிகளும் ஓ பன்னீர்செல்வம் பேச்சை உன்னிப்பாக கவனித்தனர். இதற்கு காரணம், முதல்வர் பதவியை எடப்பாடியாருக்கு விட்டுக்கொடுத்த ஓபிஎஸ், அதிமுகவின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது காரணம்.

அசைக்க முடியாதவர் எம்ஜிஆர்
இன்றைய கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக அரசியல் நேற்று, இன்று, நாளை என அப்போதும் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். மக்களுக்காக பல திட்டங்களைக் கொடுத்து அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தைத் தருபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள். அதிமுக அரசு உணவு, உடை, உறைவிடத்தை வழங்கி சிறந்த ஆட்சியைத் தருகிறது கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

என்ன காரணம்
தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை(பாஜக அரசு) ஆதரிக்கிறோம். மத்திய அரசில் அதிமுக. அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்று தந்துள்ளோம். பல சோதனை, வேதனைகளைத் தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவினர் மத்திய அமைச்சராக இல்லாதபோதும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளோம். வெளிநாடு வாழ் தமிழர்களைக் காப்பாற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அரசாக தமிழக அரசு உள்ளது. மக்களிடம் ஆட்சிக்கு உள்ள நல்ல பெயரை வாக்குகளாக மாற்றும் கடமை அ.தி.மு.க. தொண்டனுக்கு உண்டு. 2023- ஆம் ஆண்டுக்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்" என்றார்.

பிரச்சாரம் தொடக்கம்
ட்விட்டரில் ஒபிஎஸ் வெளியிட்ட பதிவில், மக்கள் திலகம் புரட்சித்தலைவர் கண்ட பொன்னான இயக்கமும், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த புனித இயக்கமுமான, "அஇஅதிமுக 2021- சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்டு வெற்றி வாகை சூட, கழக தேர்தல் பிரச்சாரத்தை" தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழக வெற்றிக்கும், கழக அரசின் மக்கள் நற்பணிகள் தொடரவும் பணியாற்றிடும் நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கூறி, இன்னும் அதிகமாக பணியாற்றிட "கழகத்திற்காக என்னை காணிக்கையாக்கி அரசியல் வேள்வி நடத்த பேரார்வம் கொண்ட எளிய தொண்டனாக எந்நாளும் உழைக்க" சபதம் ஏற்கிறேன்.

திமுக மீது விமர்சனம்
மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆண்ட பொழுது தமிழகத்திற்கு ஏதேனும் உருப்படியான திட்டங்களை தந்த வரலாறு இருக்கிறதா? 16 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற போது, கண்டும் காணாமலும் தானே இருந்தது" என்று கூறியுள்ளார்.

கவனிக்கப்பட்ட பேச்சு
ஓ பன்னீர்செல்வம் இன்று தனது பேச்சில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் மத்தியில் ஆளும் பாஜக அரசை ஆதரிப்பது ஏன் என்பது குறித்த விளக்கம் தான். நலத்திட்டங்களை பெறும் நோக்கில் ஆதரிப்பதாக கூறினார். ஆதரித்ததால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டார். அதேநேரம் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதேநேரம் ஆட்சியில் செய்யப்பட்டவற்றை அதிமுக அரசின் சாதனைகளாவே கூறிய ஓபிஎஸ். தனிப்பட்ட முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்றெல்லாம் புகழவில்லை. இதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்தன. இதேபோல் எம்ஜிஆரை சுற்றியே இன்றும் அரசியல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications