வேணாம்னே.. அவங்க சொல்லிட்டாங்க! காதில் ஓதிய ஓபிஎஸ் ஆதரவாளர் - சட்டென பேச்சை நிறுத்திய கோவை செல்வராஜ்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் வீடு முன் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி அளித்துக்கொண்டிருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதால் உடனே பேச்சை நிறுத்திவிட்டு அவர் புறப்பட்டார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை செல்வராஜ்
தீர்ப்பு வெளியானவும் ஓபிஎஸ் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ், "அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில் சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக தனித் தலைவராக வேண்டும் என்ற சதிகார செயலோடு செயல்பட்டார்.

விதிகளை மீறிய ஈபிஎஸ்
அதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தோடு 23 ஆம் தேதி கூடிய பொதுக்குழு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே கலைந்து சென்றது. 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி கட்சி விதியை மதிக்காமல் கட்சியை கட்டுப்படாமல், கட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டார். இதனால் இன்று நீதி தேவதை ஜூன் 25 ஆம் தேதிக்கு பிறகு நடந்த அனைத்தையும் ஒத்திவைத்துள்ளது.

தலைவணங்கி ஏற்கிறோம்
எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், அவரால் நீக்கப்பட்டதும், அவரால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதும் நிராகரிக்கப்பட்டது. இனி ஆண்டுக்கு ஒருமுறையே பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்ற விதிப்படி இந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறுத்த சொன்ன ஓபிஎஸ் ஆதரவாளர்
என்று அவர் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர், கோவை செல்வராஜ் காதில், "அண்ணே ஒரு நிமிசம்.. பேட்டி கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்க." என்று கூறி சென்றார். உடனே, "நீதிமன்றம் நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம், சத்தியத்தின் பக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக கொடுத்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதிமுகவை கட்டிக்காப்போம்." என்று சொல்லிவிட்டு பேட்டியை முடித்துச் சென்றார் செல்வராஜ்.












Click it and Unblock the Notifications