இபிஎஸ் திட்டம் ஒரு போதும் எடுபடாது! வேடிக்கை பார்க்க மாட்டோம்! ஓபிஎஸ் தரப்பு மிகத் திட்டவட்டம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் திட்டம் ஒரு போதும் எடுபடாது என்றும் சூழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் உள்ள இளைஞர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதாக அவரது தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு நாவடக்கம் தேவை என்பதையும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவிச் சண்டை
அதிமுகவில் எழுந்துள்ள பதவிச்சண்டையால் அக்கட்சி படு பாதாளத்தை நோக்கிச் சென்றுவிடுமோ என பதைபதைக்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள். அதிமுகவில் அடுத்தது என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்புடன் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செய்தி தொலைக்காட்சிகளை ஓடவிட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர் கடைக்கோடி ரத்தத்தின் ரத்தங்கள்.

ஓபிஎஸ் உத்தரவு
இந்தச் சூழலில் நேற்று முதல் மாறி மாறி இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் கொளத்தூர் கிருஷ்ணமுர்த்தி அளித்த பேட்டியில், ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தும் இன்னும் ஏன் எடப்பாடி பழனிசாமி அவரை அழைக்கவில்லை என வினவியுள்ளார். ஓபிஎஸ் உத்தரவுக்காக தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் காத்திருப்பதாக கூறினார்.

போலி கையெழுத்து
மேலும், ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் போலி கையெழுத்து வேண்டுமானால் போடலாம் அதையும் எடப்பாடி பழனிசாமி செய்தாலும் செய்வார் என ஒரே போடாக போட்டார். இப்படி இரண்டு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றிவருவதால் இது எதில் முடியும் என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது.

எடப்பாடி தரப்பு
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை மவுனம் காத்து வரும் எடப்பாடி பழனிசாமி இன்று மாலையோ அல்லது நாளையோ மவுனம் கலைப்பார் எனத் தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications