"தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்கவேண்டும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு.. டக்கென திரும்பிய எடப்பாடி
சசிகலாவை கட்சியில் இணைப்பது பற்றி சூசகமாக ஓபிஎஸ் பேசியுள்ளார்
சென்னை: தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசியுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.
Recommended Video
அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் தற்போது விடுதலையாகி வந்துவிட்ட நிலையில், தான் மீண்டும் அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று பேசி வருகிறார். தன்னை பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளையும் தினமும் விடுத்து வருகிறார்.

அதிமுக
ஆனால், அதிமுக மேலிடம் அவரை ஏற்க தயக்கம் காட்டி வருகிறது.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் சசிகலா கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை.. ஆனால், முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், அவரை கட்சிக்குள் சேர்த்து கொள்வது குறித்து ஓபிஎஸ் சூசகமாக தன்னுடைய விருப்பத்தை 2வது முறையாக வெளிப்படுத்தி உள்ளார்.

விழா
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..
சேத்துப்பட்டில் உள்ள தேவாயலம் அருகில் இருந்த ஆதரவற்ற இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கிறிஸ்தவர்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது என்று கூறினார்.

சசிகலா
தொடர்ந்து ஓபிஎஸ் பேச வந்தார்.. இயேசுபிரான் கதையை எடுத்துக்காட்டாக சொல்லி பேச்சை ஆரம்பித்தார்.. அப்போது, "தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கும் அழகு என்று ஓபிஎஸ் கூறினார்.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே தவறு செய்தவர்களை ஏற்றுக் கொள்ளும்படி ஓபிஎஸ் வலியுறுத்தி பேசியது பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

எரிச்சல்
சசிகலாவை மனதில் வைத்தே ஓபிஎஸ் இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.. தேவர் ஜெயந்தி விழாவின்போதும், இப்படித்தான் ஓபிஎஸ் பேசியிருந்தார்.. அப்போதே அது எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை தந்திருந்த நிலையில், இன்று எடப்பாடி முன்னிலையிலேயே, முடிந்து போன விஷயத்தை மீண்டும் துவக்கி வைத்துள்ளார் ஓபிஎஸ்.. சசிகலாவுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்துவதாக ஓபிஎஸ்ஸின் பேச்சு அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை மறுபடியும் புகைச்சலை கிளப்பி விட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications