கூட்டணி கூட்டில் குண்டு வச்சுட்டாரே..பாஜகவில் கருப்பு ‘ஆடு’! ஓபிஎஸ், டிடிவி பின்னணியில் மாஜி தலைவர்?
சென்னை: ஓபிஎஸ்ஐ தொடர்ந்து டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளி வந்திருக்கிறார். அதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் தான் வெளியே காரணம் எனக் கூறியிருக்கும் நிலையில் அதனை மறுத்திருக்கிறார் நயினார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற 'முன்னாள் தலைவர்' ஒருவர் தான் காரணம் எனவும் அவர் தான் கூட்டணி கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு கூட்டணியில் இருந்து வெளியே வருமாறு ஐடியா கொடுத்ததாக சொல்கின்றனர் நெல்லை பாஜகவினர்.
இந்தியா முழுமைக்கும் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக கூட கால் பதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் தமிழக பாஜகவுக்கு பல ஆண்டு காலமாகவே இருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் ஒன்றிரண்டு எம்எல்ஏக்களை பெறுவதற்கே திராவிட கட்சிகளின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் தலைவர்கள் இல்லாத சூழலில் தமிழகத்தில் கால்பதிக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். ஆனாலும் அதுவும் கைகூடவில்லை. இதை அடுத்து அதிமுகவை பயன்படுத்தி தமிழக அரசியலில் வலுவான கட்சியாக வர பாஜக நினைக்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

ஓ பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அரசியலில் பாஜகவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிமுக பிரிந்தது, இணைந்தது என பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் தலைமையின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. பிரதமர் மோடி சொல்லியதால் தான் தனி அமைப்பை ஆரம்பித்தேன் என ஓபிஎஸ் சொன்னதும் கவனிக்கத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சையாக போட்டியிட்டாலும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினர்.
பாஜக கூட்டணி
ஆனால் ஒரு தொகுதியிலும் கூட பாஜக கூட்டணியால் வெல்ல முடியவில்லை. இதனையடுத்து மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த காலங்களில் பாஜகவுக்கு தோள் கொடுத்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றனர். அதாவது அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை வெளியேற்ற வேண்டும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை.
டிடிவி தினகரன்
இதை அடுத்து நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அதிக முக்கியத்துவம் தருவதாகக் கூறி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதற்குப் பின்னணியில் 'தமிழக பாஜக முன்னாள் தலைவர்' ஒருவர்தான் இருக்கின்றார் என்கின்றனர் நெல்லை பாஜகவினர். அதாவது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் ஆனதால் தன்னை மதிக்கவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது. மத்திய தலைமையும் தன்னை புறக்கணித்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்வதில்லை.
முன்னாள் தலைவர்
இந்த நிலையில் தனது பழைய வார் ரூம் மற்றும் ஆதரவாளர்களைக் கொண்டு தான் உண்மையான பாஜக என்பது போல அந்த தலைவர் காட்டிக்கொள்ள நினைக்கிறாராம். மேலும் தான் இருந்ததால்தான் கூட்டணி அமைந்தது, தான் இல்லையென்றால் கூட்டணியே பாஜகவுக்கு அமையாது என்பதை காட்டிக்கொள்ளவே ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோரை அந்த தலைவர் தூண்டிவிடுகிறார் எனக் குற்றம் சாட்டுகின்றனர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள். அந்த தலைவர் யார்? என்பதுதான் இப்போதைய கேள்வி.












Click it and Unblock the Notifications