வெளுத்து வாங்குது மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்! 2 நாள் ரொம்ப முக்கியம் மக்களே!
சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் கொடுத்திருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக கோவையில் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மே மாதத்தில் மழை பெய்த நிலையில் ஜூன் முதல் மூன்று வாரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மழையை நோக்கி திரும்பி இருக்கிறது தமிழகம். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவை நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கன மழை பெய்து வருவதால் அந்த தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.












Click it and Unblock the Notifications