மறுபடியுமா.. ருத்ரதாண்டவமாடிய மழை.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டை சூழ்ந்த வெள்ளம்.. என்னாச்சு பாருங்க
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியபடி பெரிய குளம் போல் காணப்படுகிறது. கனமழை காரணமாக கிளாம்பாக்கம் இப்படி உள்ளதாக நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு வழியாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களுக்கு வசதியாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்ட பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்த புறப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 90 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது முக்கியமான சில அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், கிளாம்பாக்கம், தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வண்டலூர் பாலத்தை கடந்து கிளாம்பாக்கம் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன.
பொதுவாக கிளாம்பாக்கத்தில் மழை பெய்தாலே பேருந்து நிலையம் முன்பு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மழைநீர் கால்வாய் அமைத்து அந்த தண்ணீரை கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல, ரூ.17 கோடி செலவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று பெய்த தொடர் கனமழை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முகப்பில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
கிளாம்பாக்கத்தில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சென்னைக்குள் வாகனங்கள் நுழையவே முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் வண்டலூர் மீஞ்சுர் வெளிவட்ட சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் செங்கல்பட்டு மெயின் ரோடு, வண்டலூர் காஞ்சிபுரம் மெயின்ரோடு, வண்டலூர் தாம்பரம் மெயின்ரோடு என எல்லாமே சந்திக்கும் இடம் இதுதான். கிளாம்பாக்கத்தை கடந்து தான் எல்லா வாகனங்களும் போக வேண்டும். தற்போது மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விடமால் மழை பெய்யும் போது குளம் போல் தண்ணீர் அங்கு தேங்கிவிடுகிறது. இதனிடையே தேங்கிய தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியினை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் கிளாம்பாக்கம் பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications