செங்கல்பட்டு ஜிஹெச் 'களேபரம்'.. 13 பேர் மரணத்துக்கு 'ஆக்சிஜன்' காரணமல்ல - ஆட்சியர்
சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்திலும், கடந்த சில நாட்களாக படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதை காண முடிகிறது.
இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. நாளை மறுநாள் (மே.7) மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கவுள்ள நிலையில், நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

செங்கல்பட்டு மருத்துவமனை
இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 13 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பிறகு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்ட போதும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்தது.

309 நோயாளிகளுக்கு
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. நேற்று மொத்தமாக 447 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மட்டும் 256. இதில், 309 நோயாளிகளுக்கு நேற்று ஆக்சிஜன் சப்போர்ட் கொடுக்கப்பட்டது. ஆகையால், ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவருக்கே கொரோனா
40 வயதிற்கு உட்பட்டோர் 5 நபர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர், 8 ஆண்கள், 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இறந்துள்ளனர். நேற்று அனுமதிக்கப்பட்டவர்களில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். இறந்த 13 பேரில் 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இறந்த அனைவரும் வயது மூப்பு, கோமா என்ற வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். 13 பேரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாஸிட்டிவ். மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் தான் எனினும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

தனி சார் ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்ச் மாதம் இருந்த நோய்த் தொற்றுக்கும், இப்போதுள்ள நோய்த் தொற்றுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆகையால், இங்கு படுக்கை, ஆக்சிஜன் தேவை குறித்து கண்காணிக்க தனி சார் ஆட்சியர் ஒருவரை இன்று முதல் நியமித்துள்ளோம். அவர் இதற்கான கண்காணிப்பை மேற்கொள்வார். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதோர், கோவிட் கேர் சென்டருக்கு, கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications