கூட்டணிக்கு ரஜினியை அழைக்கும் ப.சிதம்பரம்.. அவர் வருவாரா?
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினியை ப.சிதம்பரம் அழைத்துள்ளார். ஆனால் முரசொலி கட்டுரைக்கு பிறகும் அவர் வருவார் என எப்படி நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை.
மத்தியில் பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சியுடன் போராடி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக அரசை விரட்ட திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராடி வருகிறது.
20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வலுவான கூட்டணியை ஏற்படுத்த திமுக கூட்டணி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு பாஜக வலை விரித்தது. ஆனால் அதில் அவர் சிக்கவில்லை.
அவசியம் இல்லை
இதையடுத்து திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அவரை சேர்க்க காங்கிரஸ் கட்சி வலை வீசிவிட்டு தயாராக உள்ளது. ஆம் , இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி வர விரும்பினால் அதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
உறுதியான கூட்டணி
எனக்கு தெரிந்த வரை அதில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகள் இருக்கும். கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒன்றோ இரண்டோ இருக்கலாம், தெரியாது. ஆனால் திமுக - காங்கிரஸ் என்பது உறுதியான கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
கட்டுரை
காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், ப. சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் மீது நல்ல நட்புறவு கொண்டவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் கருணாநிதியுடன் நல்ல நட்பு பாராட்டி வந்த ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து முரசொலி ஒரு கட்டுரையை எழுதியது.
எதிர்பார்க்கிறார்கள்
இதனால் ரஜினி தரப்பு கோபமடைந்ததை அறிந்து இனி இது போல் கட்டுரைகள் எழுதப்படாது என்றும் கவனத்துடன் செயல்படுமாறும் ஆசிரியர் குழுவுக்கு முரசொலி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் இந்த மனகசப்புக்கு பிறகும் ரஜினி வருவார் என்பதை இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பதே ரஜினி தரப்பின் கேள்வியாக இருக்கிறது.