ப சிதம்பரம் வீட்டில் நடந்த திருட்டு.. புகாரில் சிக்கிய பெண் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை: கடந்த ஆண்டு ப.சிதம்பரம் வீட்டில் நடந்த நகை மற்றும் பணம் திருட்டு தொடர்பாக பார்வதி என்ற பெண்ணை அண்மையில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பார்வதி (46), இவரது கணவர் சந்திரசேகர். இதில் சந்திரசேகர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுபாஷ், காமராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பார்வதி தணிகாச்சலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் வீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.5லட்சம் பணமும், 1லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையும் மாயமானது. இது தொடர்பாக சிதம்பரம் வீட்டில் வேலை செய்த விஜயா மற்றும் வெண்ணிலா ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் விஜயாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரில், பார்வதியிடம் சில நகைகளை பாதுகாப்பாக வைக்கும் படி தாங்கள் கொடுத்தாக தெரிவித்து இருந்தனர். இதையடுத்து போலீசார் பார்வதி மற்றும் கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது விஜயாவிடம் வாங்கிய நகைகள் தொடர்பாக போலீசார் பார்வதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் பார்வதி சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பார்வதி பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மன அழுத்தம் காரணமாக பார்வதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications