திருப்பதிக்கு இணையாக.. திருச்செந்தூர் கோயிலும் தரம் உயரும்.. செம பிளானுடன் சேகர்பாபு
சென்னை: திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலும் தரம் உயர்த்தப்பட்டு சீரமைக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்களும் யாத்ரீகர்களும் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். இங்கு குடிநீர், கழிவறை, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது விரைவில் குடமுழுக்கு நடத்துவது உள்ளிட்ட கோயில் சீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு
இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட வசதிகள் விரைவாக செய்து முடிக்கப்படும். பக்தர்கள் தங்கும் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்படுகிறது.

சாதாரண முகப்பு
அதன் முகப்பு வடிவம் சாதாரணமாக இருக்கிறது. அதை பிரம்மாண்டமாக வடிவமைக்க கூறி உள்ளேன். திருச்செந்தூர் புகழை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.

கோயில் இடம் ஆக்கிரமிப்பு
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்றவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு தேவையைான கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றியும் திட்டமிடப்படவுள்ளது.

காத்திருப்பு
கர்ப்பகிரகத்தை தூய்மை பராமரிக்கவும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அமைச்சர் சேகர்பாபு.












Click it and Unblock the Notifications