என்னது.. இவங்க ரெண்டு பேரில் ஒருத்தருக்கு வாய்ப்பா?.. பாஜகவில் புதிய பரபரப்பு
சிபி ராதாகிருஷ்ணன், பி சதாசிவம் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: இவங்க ரெண்டு பேருக்கும்தான் அடிக்க போகுது யோகம்.. அப்படித்தான் டில்லி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
எம்பி தேர்தலில் தமிழகம் சார்பில் பாஜகவுக்கு 5 சீட் தரப்பட்டது. அப்போதே ஒருவேளை தோற்றாலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர வேண்டும் என்ற ஒரு பேச்சு இருந்தது.
எதிர்பாராத வகையில் பாஜக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. ஆனால் பேசியபடி பாஜக சார்பில் ஒரு சீட் தரப்பட உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் பாஜகவின் பிடி இருக்க வேண்டும் என்பதே!

பொன்.ராதாகிருஷ்ணன்
அதன்படி, முதல் சாய்ஸ்சாக இருந்தது பொன்.ராதாகிருஷ்ணன்தான். இவரது தோல்வி பாஜக தலைமையால் இன்னும் ஜீரணிக்க முடியாதது. இருந்தாலும் இவரை விட்டுவிடக்கூடாது என்பதால் வேறு வகையில் பயன்படுத்த பாஜக முயலக்கூடும்.

எச்.ராஜா
பிறகு எச்.ராஜா பெயர் அடிபட்டது. இதற்கு காரணம், பாஜக தலைமை மீது இவர் வைத்துள்ள நெருக்கம்தான். ஆனால் இது உண்மையானால், சர்ச்சைகள், எதிர்ப்புகள், எப்படி வெளிப்படுமோ தெரியாது. எனினும் இப்போது, எச்.ராஜா பெயரும் அடிபடுவது குறைந்து போய்விட்டது.

முன்னுக்கு வந்தவர்
முக்கியமாக 2 பேர் பெயர்கள் அடிபடுகிறது. ஒருவர் சிபி ராதாகிருஷ்ணன். கட்சி மற்றும் கோவையில் செல்வாக்கு நிறைந்தவர். ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர். போன முறை 2014 தேர்தலில், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளோடு களமிறங்கினாலும், 50,000 வாக்கு வித்தியாசத்தில், திமுகவை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்திற்கு வந்தார்.

வாக்கு வித்தியாசம்
இந்த முறை அதைவிட பரிதாபம்.. அதிமுகவின் துணையோடு களம் இறங்கினாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளார். இந்த விஷயத்தை பாஜக தலைமை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. அதனால் இவருக்கு சீட் தர யோசித்து வருகிறது.

சதாசிவம்
பாஜகவின் அடுத்த சாய்ஸ்... நம்ம ஊர் சதாசிவம்தான்! உச்சநீதிமன்ற தலைமை நீதியாக பணியாற்றினாரே.. அவரேதான்.. இப்போது கேரளா கவர்னராக உள்ளாரே.. அதே சதாசிவம்தான்! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதாலும், சீரிய பணிகளை இவர் நீதிபதியாக இருந்தபோது செய்தவர் என்பதாலும் எப்பவுமே இவரை நாம் மறந்துவிட முடியாது.

பாஜக விசுவாசி
மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், பெரும்பாலும் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அந்தவகையில் சதாசிவமும், பாஜகவுக்கு நெருக்கமானவர். பாஜகவின் முக்கிய விசுவாசி என்றுகூட சொல்லலாம்.

உதவிகள்
இது மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு நெருக்கடிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நிறைய உதவிகளை புரிந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் இருந்து, பல்வேறு நெருக்கடி காலகட்டங்களில் தமிழக அரசுக்கு இவரது உதவி மறைமுகமாகவே இருந்ததாம்! மிகப்பெரும் திறமைசாலியான இவருக்கு சீட் வழங்கலாமா என்றும் பாஜக யோசித்து வருகிறது.

யாருக்கு சீட்?
ஒன்று ராஜ்ய சபா சீட் அல்லது மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தால், அதில் ஒரு பதவி என்பதுதான் இப்போதைக்கு டில்லி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சிபி ராதாகிருஷ்ணன், சதாசிவம்.. இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications