வீரப்பனை வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ்-க்கு பத்மஸ்ரீ! Operation cocoon நாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம்
சென்னை: சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்திய காவல் துறை வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநில காவல்துறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த அதிரடி நடவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த முன்னாள் காவல்துறை தலைவர் விஜயகுமார் ஐபிஎஸ்-க்கு, 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டும் வகையிலேயே இந்த உயரிய குடிமகன் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷன், 13 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பட்டியலில் 19 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும், வெளிநாட்டினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் என ஆறு பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 16 பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் முக்கியமாக முன்னாள் டிஜிபி விஜயகுமார் ஐபிஎஸ் பெயர் இடம்பெற்றிருப்பது காவல் துறை வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் என்ற பெயரை இந்தியாவில் அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மறைந்து கொண்டு, சந்தன மரக் கடத்தல், யானைகளை வேட்டையாடி தந்தம் கடத்தல், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வீரப்பன், மூன்று மாநில அரசுகளுக்கும் பெரும் சவாலாக இருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், வீரப்பன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முன்னாள் டிஜிபி விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டது. இந்த அணியில், தற்போது டெல்லி காவல் ஆணையராக இருந்த் கூடுதல் டிஜிபி சஞ்சய் அரோரா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். வீரப்பனை உயிருடன் பிடிக்கவோ அல்லது சுட்டுப் பிடிக்கவோ முழுப் பொறுப்பும் விஜயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின் முடிவாக, 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே நடந்த என்கவுன்டரில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வீரப்பன் அத்தியாயத்திற்கு இறுதி அத்தியாயமாக அமைந்தது. இந்த முழு நடவடிக்கையின் அனுபவங்களையும், பின்னணியையும் விளக்கும் வகையில், 'Veerappan - Chasing the Brigand' என்ற ஆங்கில நூலையும் முன்னாள் டிஜிபி விஜயகுமார் எழுதியுள்ளார்.
தமிழக காவல் துறையில் டிஜிபி உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயகுமார். வீரப்பன் வேட்டையின் வெற்றிக்குப் பிறகு, அப்போது தமிழக அரசு சார்பில், அந்த சிறப்பு அதிரடிப் படை குழுவினருக்கு விருதுகள், நிதி உதவி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கடந்த பிறகு, அவரது தலைமையும், காவல் துறைக்கான சேவையும் மீண்டும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு, விஜயகுமார் ஐபிஎஸ்-க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications