Exclusive: அதிமுக இல்லாமல் 2026ல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது.. புட்டுப் புட்டு வைக்கும் பாண்டே!
சென்னை: அதிமுகவுக்கு அந்தக் கட்சி தொண்டர்களே வாக்களிக்கவில்லை, அதிமுக உறுப்பினர்களின் வாக்குகளே பாஜகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் சிதறி உள்ளது, திமுக கூட்டணி உடையாமல் 2026 சட்டசபை தேர்தலில் வேறு யாருக்கும் வெற்றி இல்லை என நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
பாண்டே பேட்டி: நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்த மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசுகையில், "திமுக கூட்டணி உடையாமல் வேறு யாருக்கும் வெற்றி இல்லை. அதிமுக இல்லாமல் ஒரு கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது. இந்த 2 தான் 2026 தேர்தல் ஃபார்முலா. இன்றைய நிலைமையை வைத்துக்கொண்டு அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதிமுகவுக்கு பாஜகவை கண்டு பயம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகள் 30%. பாஜக வாங்கிய வாக்குகள் 18%. இன்னும் 2 தேர்தல்களில் அதிமுகவை பாஜக சமன் செய்துவிடும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

பங்காளிகள்: அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் உருவானது. ஆனால், அதிமுகவினர் திமுக எங்கள் பங்காளி கட்சி என்கிறார்கள். நாங்களும் அவர்களும் தான் ஆட்சியில் இருப்போம், வேறு யாரும் வர முடியாது என அதிமுகவினர் சொல்கிறார்கள் என்றால் அது புரிந்துணர்வு தான், அதில் பகை இல்லை. இரு கட்சிகளும் அண்டர்ஸ்டாண்டிங்கில் உள்ளார்கள் என்றுதான் மக்கள் கருதுவார்கள். இந்த 2 கட்சிகளும் வேண்டாம் என்பவர்களின் சாய்ஸாக பாஜக கூட்டணி இருக்கிறது.
தொண்டர்களே ஓட்டு போடவில்லை: அதிமுகவுக்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொன்னார்கள். ஆனால், ஒரு கோடி ஓட்டு கூட வாங்கவில்லை. அதிமுக தொண்டர்களே அதிமுகவுக்கு ஓட்டு போடவில்லை. பாஜக கூட்டணிக்கு 80 லட்சம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் அக்கட்சிக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால் நாதகவுக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லை. உறுப்பினர்களை தாண்டி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அதிமுகவில் உறுப்பினர்களே அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை.
நாளைக்கே கூட்டணி: எடப்பாடி பழனிசாமி விரும்பினால் உடனடியாக பாஜக, பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைந்துவிடும். அண்ணாமலை, பாஜகவின் அகில இந்திய தலைவர் அல்ல. அண்ணாமலை எதிர் கருத்தை கொண்டிருந்தாலும், அதிமுக உடனான கூட்டணியை பாஜகவின் அகில இந்திய தலைமை விரும்பியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் அந்தக் கூட்டணியை விரும்பவில்லை." எனக் கூறி உள்ளார் ரங்கராஜ் பாண்டே.












Click it and Unblock the Notifications