பாரத் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைத்த பப்புவாநியூகினியா அமைச்சர்
சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புதுமைக் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து, தொழில்முனைவோர்களாக மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஸ்டார்ட் அப் உள்ளிட்ட தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் பாராட்டத் தக்கது என்று பப்புவா நியூகினியா நாட்டின் தொழில்துறை அமைச்சர் சசிந்தரன் முத்துவேல் கூறினார்.

சென்னை சேலையூர் பாரத் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற 6வது புதுமை கண்டுபிடிப்பு தின விழாவில் பாரத் டிஜிட்டல் நூலகத்தைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்தில் கல்வியின் தொழில்நுட்பத் திறன் மிகுந்த மனிதவளம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் அதிக இளைஞர்களை கொண்ட இந்தியாவில் கல்வி தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்துவதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசும் கல்வி நிறுவனங்களும் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.

ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பப்புவா நியூகினியாவில் இந்திய அரசு அண்மையில் 70000 கொரோனா நோய் தடுப்பு ஊசிகளை வழங்கிய பெரிய உதவி புரிந்துள்ளது. அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த பப்புவா நியூகினியாவில் தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.

பாரத் கல்வி நிறுவன இணைவேந்தர் சுந்தரராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். புதுமை கண்டுபிடிப்பு மாணவர் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்,பாரத் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத் தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த், துணை வேந்தர் கே.விஜயபாஸ்கர் ராஜூ, பதிவாளர் பூமிநாதன், இணை பதிவாளர் ஆர்.ஹரி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.













Click it and Unblock the Notifications