பரந்தூரில் தேங்கிய வெள்ளம்! "இதுக்குதான் வேண்டாம்னு சொல்றோம்.." 2ஆம் ஏர்போர்ட் அமைக்க மக்கள் எதிர்ப்பு
சென்னை: பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு வெள்ள நீரும் தேங்குவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நகரின் நடுவே அமைந்துள்ளதால் ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ததும் கடினம்.
ஏனென்றால் அங்கு ஒரு பக்கம் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இடமும் மற்றொரு பக்கம் குடியிருப்புகளும் உள்ளன. இதனால் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை விரிவாக்கமே செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

2ஆவது ஏர்போர்ட்
நீண்ட ஆய்வுக்குப் பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது மாநில வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், விமான நிலையத்திற்கு எதிராக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு சில கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளனர். பரந்தூர் மக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருந்தாலும் கூட, அங்கு விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தியே வருகின்றனர்.

கனமழை
கடந்த வாரம் தான் வட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாகக் கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி பெரும்பாலான வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது.. இதில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் திட்டமிடப்பட்டுள்ள பாரந்தூரிலும் அதன் அண்டை கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏர்போர்ட் அமைக்கத் திட்டமிடப்பட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பல நீர்நிலைகளைக் கொண்ட பரந்தூர், விமான நிலையத்துக்கு ஏற்ற இடம் இல்லை என்று இதனால் தான் சொல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வு
ஓரளவுக்கு நல்ல மழை பெய்தாலே அங்கு இப்படித்தான் நீர் மூழ்கிப் பாதிப்புகள் ஏற்படுமாம்.. மேலும், இத்தனை நீர்நிலைகள் இருக்கும் இடத்தில் ஏர்போர்ட் போன்ற கட்டுமானங்களை அமைப்பது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக இது குறித்து தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) அதிகாரிகள் கூறுகையில், "இது பிரச்சினை ஏற்கனவே எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

வல்லுநர் குழு
தற்போதுள்ள நீர்நிலைகளை முடிந்தவரை ஆழப்படுத்தி, பாதுகாக்கும் முயற்சியில் இந்த குழு இறங்கியுள்ளது. நீரைச் சேமிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த குழு ஆய்வுகளைச் செய்து வருகிறது. சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் மற்றும் நீர்வளத் துறை நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்கள் சுற்றுச்சூழலுக்குக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை அரசுக்குப் பரிந்துரைக்க உள்ளனர். இருப்பினும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதனால் பல ஆபத்துகள் ஏற்படும் என்றே எச்சரிக்கிறார்கள்.

விவசாயிகள்
இந்தளவுக்கு நீர் தேங்கும் ஒரு பகுதியில், இவ்வளவு பெரிய கட்டுமானத்தை ஏற்படுத்தும் போது, வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் என்றும் மேலும் அண்டை கிராமங்களும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி கூறுகையில், "இங்கு வெள்ளம் ஏற்படுவது புதிது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு, எனது பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதில் பெரிய இழப்பை நான் எதிர்கொண்டேன். இங்கு ரன்வே அமைத்தால் என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள்" என்றார்.

அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு வழக்கத்தை விடக் கூடுதலாக 35% உபரி மழை பெய்துள்ளது என்றும் இதன் காரணமாகவே இந்த முறை கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "சாத்தியக்கூறு ஆய்வின் போது அந்த அனைத்து காரணங்கள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் ஏர்போர்ட்டை அமைத்தால் மோசமான பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து A டு Z விரிவான ஆய்வை மேற்கொள்வோம். இதன் காரணமாகவே துறை சார்ந்த வல்லுநர்களை இதில் இணைத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications