“விதவிதமான டிஃபன்… யார் தருவார்?” காலை உணவுத் திட்டத்தால் பெற்றோர்கள் உற்சாகம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதற்கு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல பிரிவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி 'முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை' மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டம் முதற்கட்டமாக 1545 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றே கால் லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்திய 85% பள்ளிகளில் பிள்ளைகளின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்தது. மேலும் இத்திட்டத்தினை பெற்றோர்களும் பரவலாக ஆதரித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இதனைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதாவது 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

அதனையொட்டி வரும் 25 ஆம் தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் விரிவாக்கம் செய்யப்பட்ட 'காலை உணவுத் திட்ட'த்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்க இருக்கிறார்.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா மூன்று பேருக்கு உணவு பரிமாறுதல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது அங்கு வழங்கப்பட்ட உணவைப் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ருசி பார்த்து அதன் தரத்தைச் சோதித்தனர். அப்போது பலரும் உணவின் தரம் மற்றும் சுவை சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினர்.

அரசு பிள்ளைகளுக்காக வழங்கும் இந்தக் காலை சாப்பாட்டில் உணவின் அளவு 150 முதல் 200 கிராமம் அளவுக்கு இருக்கிறது. 293.40 அளவு கலோரி உள்ளது. புரதச்சத்து 9.85 கிராம் உள்ளது. கொழுப்புச்சத்து 5.91 கிராம், இரும்புச்சத்து 1.64 கிராம், கால்சியம் 20.41 கிராம் உள்ளது.
இந்த உணவுத்திட்டம் குறித்து மழலை குரலில் தனது அனுபவத்தைச் சொல்கிறார் ஷாலினி. இவர் கோவை வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம் பள்ளி மாணவி. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
"என் அம்மா தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போய் விடுவார். அதனால் காலை சாப்பாடு சமைக்க முடியாது. தினம் காலையில் பழைய சாதத்தைத்தான் சாப்பிட்டு வருவேன். ஆனால், இப்போது எங்கள் ஸ்கூலில் சூடா சாப்பாடு போடுகிறார்கள். நல்லா ருசியாகவும் இருக்கிறது" என்கிறார்.

ஷாலினியின் தாய் தீபா, "காலையில் 4 மணிக்கு எழுந்து வேலைக்குப் போக வேண்டும். அதனால் என் குழந்தைக்கு ஸ்கூல் போகும் நேரத்தில் எதையும் செய்துகொடுக்க முடியாது. இப்போது காலை உணவுத்திட்டத்தை ஸ்டாலின் அய்யா தொடங்கியதிலிருந்து என் மகள் நிம்மதியாகச் சாப்பிடுகிறாள்" என்கிறார்
கரூரில் உள்ள கள்ளம் பள்ளி ஊராட்சி ஆதிதிராவிட நலத் துவக்கப்பள்ளி ஆசிரியை மாலதி, "எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் பாதிப் பேர் வெளியூரில்தான் கூலி வேலை செய்கிறார்கள்.

இதில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். 100 நாள் வேலைக்குப் போகின்றவர்கள் இருக்கிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பவர்கள்கூட இருக்கிறார்கள். பலரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெற்றோரின் பிள்ளைகள்தான் இங்கே படிக்கிறார்கள்.
இதுவரை அந்தக் குழந்தைகளுக்குக் காலை உணவு என்பதே பெரும்பாலும் கிடைக்காது. அதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக எங்கள் பள்ளி பிள்ளைகள் வயிறு முழுக்க சாப்பிடுகிறார்கள். அதுவும் சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிடுகிறார்கள். இதைக் கொண்டுவந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" என்கிறார்.

திருநெல்வேலி அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியை பியூலா, "முதலிலேயே எனது நன்றியை நான் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், எங்களது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைத்தும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள்.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் வீட்டு வேலைக்குத்தான் செல்கிறார்கள். வருமானம் மிகமிகக் குறைவு. வறுமையான பின்னணிக் கொண்டவர்கள். அவர்களுக்குச் சத்தான உணவு என்பது எல்லாம் அப்புறம். முதலில் காலை உணவே இருக்காது. அதனால் காலை வரும்போதே சோர்ந்துபோய் தான் வருவார்கள். உற்சாகமே இருக்காது.

என்றைக்கு முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் ஆரம்பித்தோமோ, அன்று முதல் குழந்தைகள் காலையில் நேரம் தவறாமல் வருகிறார்கள். இதனால் வருகைப்பதிவு உயர்ந்துள்ளது. நல்ல சுவையான சாப்பாடு என்பதால் சுவைத்து உண்கிறார்கள். வீட்டில்கூட காலை வேளைகளில் ஒரே மாதிரியான உணவுதான் கிடைக்கும்.
ஆனால், பள்ளியில் தினம் தினம் விதவிதமான உணவுகள் கிடக்கின்றன. நிம்மதியான சாப்பாட்டை உண்டவுடன் உற்சாகமாக உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள். அந்த முகத்தில் ஒரு மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். அந்தளவுக்கு இது பயனுள்ள திட்டம்" என்கிறார்.
திருச்சி அரசு சையது முதுர்சா மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை மெர்சி கிரேஸி, இந்தக் காலை உணவுத்திட்டத்தால் புதியதாக 40 மாணவர்கள் வருகை தந்துள்ளதாகப் பதிவேட்டைத் திறந்து காட்டுகிறார்.

இவர்களைப் போலவே தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ள திருவாரூர் புலிவலம், மயிலாடுதுறையில் உள்ள ஆத்தூர், கோவையில் உள்ள அன்னூர் ஆகிய ஊர்களின் பெற்றோர் இந்தக் காலை உணவுத்திட்டத்தால், தங்களின் பெரிய சுமை குறைந்துள்ளதாகவும் காலையில் பரிமாறப்படும் சுவையான உணவுகளால் பிள்ளைகள் உற்சாகமாகச் சாப்பிடுகிறார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
100 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றி நடை போடுகிறது இந்த திராவிட மாடல் திட்டம்!














Click it and Unblock the Notifications