பாக்யராஜ் இறப்பை அறிந்து முதல் ஆளாக ஓடி வந்த பார்த்திபன்! கண்ணீரில் கோலிவுட்!
சென்னை: நடிகர், பன்முகத்திறமையாளர் பாக்யராஜ் மறைந்த செய்தி கேட்டதும் அவரது சிஷ்யரான பார்த்திபன் முதல் ஆளாக வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வந்து அங்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கண்ணீரோடு வந்த அவர் கலங்கி போய் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். பாக்யராஜின் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் உடைந்து அழுதார். மேலும் தனக்கு இது முக்கியமான நாள் என்றும் தெரிவித்திருந்தார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பார்த்திபன். பாரதிராஜாவை போல் ஏராளமான இயக்குநர்களை பாக்யராஜும் அறிமுகப்படுத்தியுள்ளார். 25 படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ், தினமும் வாக்கிங் செல்வது வழக்கமாம்.
அந்த வகையில் அவர் இன்று வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் லேசாக நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73.
பாக்யராஜின் உடலுக்கு பார்த்திபன், பிரபு, சரத்குமார், ராதிகா, ஏசி சண்முகம், இயக்குநர் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், மணிரத்னம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அது போல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.
அது போல் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications