பவன் கல்யாணின் ‘தோலி பிரேமா' வெற்றி ரகசியம்? ஜெகனை வீழ்த்தியது எப்படி?
ஹைதராபாத்: ஒரே சமயத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாகத் தனது கட்சியை வளர்த்து எடுத்துள்ளார் நடிகர் பவன் கல்யாண். இவர் வெற்றி பெற்றது எப்படி?
ஆந்திர அரசியலில் அதிரடி புயலாக மாறி இருக்கிறார் பவன் கல்யாண். அவர் நேற்று அவரது அண்ணன் சஞ்சீவியைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் கூடி நின்று பவனை வரவேற்றது. அண்ணன் சிரஞ்சீவி காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பவன் கல்யாண் வணங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
'தோலி பிரேமா' வெற்றி ரகசியம்:
எந்த இடத்தில் அண்ணன் தோற்றாரோ, அதே இடத்தில் உறுதியாக நின்று தம்பி பவன் கல்யாண் சாதித்துக் காட்டி இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 21 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது ஒரு சாதனை அல்ல, ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருப்பதுதான் மாபெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த வெற்றியைப் பவன் கல்யாண் தனது 'தோலி பிரேமா' திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான 'அக்கடா அம்மாயி இக்கட அப்பா' படத்தின் மூலம் டோலிவுட்டில் நடிகராகக் காலடி எடுத்துவைத்தார் பவன். அவரை இந்தப் படம்தான் அறிமுகம் செய்தது.
1998 ஆம் ஆண்டு வெளியான 'தோலி பிரேமா' வெற்றிப் படமாக மாறும்வரை அவர் பல தோல்விகளைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைத் தலைகீழாக மாற்றியது 'தோலி பிரேமா'.
ஆகவேதான் அந்த வெற்றியை ஒரு மைல் கல்லாகக் குறிப்பிடும் அளவுக்கு அவர் மனதில் அந்தப் பெயர் பதிந்துபோய் உள்ளது.
"பல வருடங்களாக வெற்றியை நான் பார்க்கவில்லை. கடந்த 2019 தேர்தலில் நான் தோல்வியடைந்தேன், எவ்வளவோ படங்கள் தயாரித்தாலும், நான் வெற்றி பெற்றதாக யாரும் என்னிடம் சொன்னதே இல்லை.
நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். எனது கட்சி கடந்த முறை ஒரே ஒரு இடத்தில்தான் வென்றது. இப்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதை இன்னும் என்னால் உணர முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு தோலி பிரேமா என்ற படத்தின் மூலம் முதல் வெற்றியைப் பார்த்தேன்" என்று கூறியுள்ளார்.
அண்ணன் சிரஞ்சீவி தோற்ற இடம்:
தம்பியின் வெற்றியைப் பற்றி சிரஞ்சீவி "பல ஆண்டுகளுக்கு முன்பு பவன் திரைத்துறைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,
ஆனால் அவரே அரசியலில் சுதந்திரமாக அடி எடுத்து வைத்தார். அவரைக் குறித்துத் தாக்கியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு வலித்தது,

ஆனால் இது நாட்டில் உள்ள தாய்மார்களுக்காக அவர் செய்ய வேண்டிய தியாகம் என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். அநீதி தலையெடுக்கும் போது அவர் ஒருபோதும் அமைதியாக இருந்தது இல்லை,
எனவே அவரது குரல் ஓங்கி ஒலிப்பதற்கான தகுதி அவருக்கு உண்டு. அவர் எங்கள் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த பிள்ளை, ஆனால், எப்போதும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் அவர்தான் முதல் நபர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சரியாகச் சொன்னால், கடந்த ஆண்டு அக்டோபரில், ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் சந்திரபாபு நாயுடு, அன்றைய முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி அரசின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற நாயுடு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டதைக் கண்டு பொங்கி எழுந்தார் பவன் கல்யாண். இந்தச் சம்பவம்தான் அரசியல் கலத்தில் பவனை நாயுடுவுடன் கைகோர்க்கச் செய்தது. அது ஆந்திர அரசியலில் பல மாற்றங்களை உண்டாக்கப் போகிறது என்பது ஜெகன் உணரவில்லை.
திரைப்படங்களில் தனது அதிரடியான கதாபாத்திரங்களுக்காக 'பவர் ஸ்டார்' என்று தனது ரசிகர்களால் அழைக்கப்பட்ட கல்யாண் 2014 இல் ஜனசேனாவைத் தொடங்கினார். ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை.
அவருக்கு முன்பாக அவரது மூத்த சகோதரர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். பல்வேறு தோல்விகளைச் சந்தித்தார். இறுதியில் கட்சியை 2011இல் காங்கிரசுடன் இணைத்தார்.
2019 சட்டமன்றத் தேர்தலில், பீமாவரம் மற்றும் கஜுவாகா சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு பவன் கல்யாண் தோல்வியடைந்தார். ஆகவே அவரது ஜேஎஸ்பி பலத்த பின்னடைவைச் சந்தித்தது.
இந்தத் தேர்தலில் அவரது கட்சி பலகோல் என்ற ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற ஒருவரும் விரைவில் ஜெகன்மோகன் கட்சிக்குத் தாவினார். இது பவன் கல்யாணுக்குக் கிடைத்த இன்னொரு அடி.
அப்படியும் பவன் அமைதியாக இருந்துவிடவில்லை, ஜெகன்மோகனையும் அவரது ஆட்சியையும் பல்வேறு வகைகளில் ஆக்ரோஷமாக எதிர்த்து வந்தார் பவன்.
வெற்றிக்கு வழி செய்த ஜன வாணி:
2022 ஆம் ஆண்டு, கல்யாண் 'ஜன வாணி'யை தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டார். மனுக்களைப் பெற்றார். விடாமல் பொதுக் கூட்டங்களை நடத்தினார்.
அக்டோபர் 19 அன்று, மாநில அரசு விசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த ஒரு கூட்டத்தைத் தடுத்தது. அத்துடன் ஜனசேனா தொண்டர்களைக் கைது செய்தது. இறுதிக் கட்டமாகப் பவன் கல்யாண் ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம்தான் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாயுடுவையும் பவன் கல்யாணையும் மீண்டும் ஒன்றிணைத்தது. நாயுடு விஜயவாடாவுக்கு நேரில் சென்று கல்யாணைச் சந்தித்து தனது ஆதரவை அறிவித்தார்.
கூடவே பாஜகவும் பவன் கல்யாண் பக்கம் நகர்ந்தது. "ஒய்எஸ்ஆர்சிபியை தோற்கடிக்க ஒன்றுபடுவதே எங்கள் நோக்கம். தெலுங்கு தேசம், ஜே.எஸ்.பி., பா.ஜ., ஆகிய கட்சிகள் ஒன்றிணையாவிட்டால், ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் வீணாகிவிடும்'' என்றார் பவன்.
இடைவிடாமல் கல்யாண், பாஜகவின் தேசிய தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா போன்றவர்களை விடாமல் சந்தித்து வந்தார். அது ஆந்திர மாநிலத்தில் வலுவான கூட்டணிக்கு முடிச்சு போட்டது.
இன்று ஆந்திர மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவுக்குப் பவனை அழைத்து வந்துள்ளது. கூடவே அவர் மத்திய அரசிலும் ஒரு முகமாக எழுந்து நின்றுள்ளார்.
ஒரே நேரத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக உட்கார காலம் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications