தேர்தல் நாளிலும் சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்… சமூக ஆர்வலர்கள் கவலை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அந்த நாட்களில், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் குறையும் நிலை உருவாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் கட்டமாக வருகிற 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலோடு, இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் மகாவீர் ஜெயந்தியும், வாக்கு பதிவுக்கு மறு நாள் புனித வெள்ளி விடுமுறையும் அடுத்தடுத்து சனி , ஞாயிறு விடுமுறையும் வருகிறது.

கோடை விடுமுறை
பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தேர்தலையொட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை நாட்கள் வருவதால், கோடை சுற்றுலாவிற்கு வழக்கத்தைவிட அதிகமாக முன்பதிவு நடைபெற்று வருவதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா செல்ல ஆர்வம்
ஆன்மீக சுற்றுலாவாக கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களுக்கும், வெளிநாட்டு பயணமாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் பதிவுகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கவலை
அதேபோன்று, ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு, பலர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் விடுமுறையால் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக கடமை
இளைஞர்கள், பொதுமக்கள் நாட்டு நலன் கருதி தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம், தேர்தல் ஆணையமும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications