ஒரே இரவில் தகித்த சென்னை.. வீதிகளில் திரண்ட மக்கள்! மின் வாரிய அலுவலகங்களில் குவிந்து வாக்குவாதம்!
சென்னை: சென்னை நகரமே இருளில் மூழ்கிய நிலையில், மின் வாரியத்தில் புகார் அளிக்க முயன்றும் உரிய பதில் கிடைக்காத நிலையில் அருகில் உள்ள மின் பகிர்மான கழக அலுவலகங்களுக்குச் சென்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் மின் வாரிய அலுவலகம் அருகே பொதுமக்கள் திரண்ட நிலையில் அங்கு போலீசார் குவிந்தனர்.
மணலி துணை மின்நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னை முழுக்க மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம், ராயபுரம் என பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கின. முக்கிய சாலைகளில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில் நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வெகு நேரமாக சென்னை நகரமே இருளில் இருப்பதால் பொதுமக்கள் அருகில் இருக்கும் மின் பகிர்மான கழக அலுவலகங்களுக்கு சென்று போராட்டம் நடத்தினர். மின் பகிர்மான கழக ஊழியர்களிடம் பொதுமக்கள், எப்போது மின்சாரம் வரும் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மின்சார வாரிய அலுவலகத்தின் முன் திரண்டனர். அங்கு வந்த போலீசார், விரைவில் மின்சாரம் வந்துவிடும், வீட்டுக்குச் செல்லுங்கள், இங்கு கூட்டம் திரண்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியிலேயே இப்படி இருக்கிறது என்றால் மற்ற தொகுதியில் நிலைமை எப்படி இருக்கும் என்று பாருங்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? எவ்வளவு நேரத்தில் மின் விநியோகம் சீராகும் என மின் வாரிய அதிகாரிகள் சொல்ல மறுக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நான் கரண்ட் பில் கட்டவில்லை என்றால் மின் வாரிய ஊழியர்கள் தான் வந்து பியூஸ் கேரியரை பிடுங்குகின்றனர். அப்போது என்ன போலீசா வருகிறார்கள்? இப்போது போலீஸ்காரங்க வந்து சொன்னால் நான் எப்படி ஏற்க முடியும்? ஈ.பி பில் கட்ட லேட் ஆனால் அபராதம் போட்டு வசூல் செய்கிறீர்களே.. இப்படி இஷ்டத்துக்கு மின்சாரத்தை நிறுத்தினால் யார் கேட்பது? என கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார்.
மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த சில மணி நேரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருவல்லிக்கேணி, சேப்பாகம், புளியந்தோப்பு, ஆர்.ஏ புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் நகர்ப் பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, போரூர், மதுரவாயல், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகியுள்ளது.
இது குறித்து மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், "மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. படிப்படியாக மின்சாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. மத்திய சென்னை பகுதியில் மின் விநியோகம் கொடுக்க துவங்கியுள்ளோம். வடசென்னை பகுதியில் விரைவில் மின் விநியோகம் சீராகும்" என்று தெரிவித்துள்ளார். எனினும் சென்னை முழுவதும் மின்சாரம் சீராக வழங்க 3 முதல் 4 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications