அன்பில் மகேஷ் சார் கொஞ்சம் இதை என்னனு கவனிங்க.! குவியும் பாலியல் புகார்! திக்கு தெரியாத ஹெல்ப்லைன் டீம்!
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கவும், உயர் கல்விக்கு தேவையான ஆலோசனை பெறவும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்கிக் கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஹெல்ப் லைன் கடந்த அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடங்கப்பட்டது. 14417 என்ற எண்ணின் மூலமாக 24 மணி நேரமும் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை போக்கிக் கொள்ளும் வகையில் இது செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு அவ்வபோது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.
சமீபகாலமாக இந்த உதவி மையத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்று குறைதீர் மையத்தில் பணியாற்றுபவர்களே குறையோடு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை உள்ளிட்ட சில இடங்களில் பாலியல் பிரச்சனைகள் எழவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 14417 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தெரிவிக்கலாம் என்று பேட்டி கொடுத்திருந்தார். அவர் பேட்டி கொடுத்த அந்த நாளிலிருந்து தினசரி 100 அழைப்புகளுக்கு குறையாமல் வருவதாகவும் ஆனால் அதன் மூலம் வரக்கூடிய குறைகளை யாரிடம் தெரிவிப்பது என்று தான் தங்களுக்கு தெரியவில்லை என ஊழியர்கள் கதறுகின்றனர்.

தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி அங்கே அமர்த்தப்பட்டு உள்ளதால் அவரை நேரடியாக அணுகுவதில் சிக்கல் இருப்பதாகவும், பாலியல் சீண்டல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கொடுத்தால் அவர்களுக்கு இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழிப்பதாகவும் கூறுகின்றனர்.. இது காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் யாரிடம் தெரிவிப்பது என்றும் புரியாமல் திணறுகின்றனர்.
மேலும் இந்த உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக தற்போது செயல்பட்டு வருபவர் புதிதாக திருமணம் ஆனவர் என்பதால் எப்போதும் போனும் கையுமாக இருப்பதனால் இங்கு வரும் புகார்களுக்கு தீர்வு காண முயல்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த குறைதீர் மையம், புகார் பெறும் மையமாக மட்டுமே செயல்படும் அவலநிலை இருப்பதாகவும் தினசரி பெற்றோர்களும்,மாணவிகளும் தெரிவிக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் தாங்கள் கையறு நிலையில் இருப்பதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
"புகாரை துணிந்து தாருங்கள் உங்களின் ரகசியம் காக்கப்படும்" என்று கூறி பெற்ற புகார்களையே ரகசியமாக வைத்துக் கொள்ளும் நிலை இருப்பதனால் இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குறைதீர் மையத்தில் தற்போது தொலைபேசி வாயிலாக புகார்களை பெறுவதற்கு 9 பேர், உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க 6 பேர்,பாலியல் தொந்தரவுகள் தொடர்பான ஆலோசனைக்கு 2 பேர் என்ன மொத்தம் 17 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications