ஸ்டெர்லைட் ஆலை.. மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நிதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு பேசி உள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 'எண்ணித் துணிக' என்ற பெயரில் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஸ்டெர்லைட் மூடல்: அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் எழுந்து நின்று, வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் நிதியை முறைப்படுத்துவதற்கு என்ன தேவை உள்ளது? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, "தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கில் நிதி வருகிறது.
அந்த நிதி தொண்டு செய்வதற்காக பயன்படுத்தப்படாமல் வேறு நோக்கங்களுக்காக பயன்படுப்படுகிறது. நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க வெளிநாட்டு நிதி உதவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடங்குளத்தின் அணு உலை அமைக்கப்படும்போது போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டன.

பாப்புலர் பிரண்ட் தடை: கேரள மாநிலம் விளிஞ்சத்தில் அதானியின் துறைமுகம் அமைக்கப்படும்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் வெளிநாட்டு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைதான். வெளிநாட்டு நிதி உதவி மூலமாக மக்களை தூண்டிவிட்டு அதை மூடிவிட்டார்கள். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்தே பெரும்பாலான நிதி கிடைத்து வந்தது.
இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்ற 90 பேரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பே அனுப்பி உள்ளது. இத்தகைய வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்துவதற்காகவே மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி இருக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications