பெரியாருக்கு சிலை எதுக்கு? சீமான் கேட்ட கேள்வி.. மறுநாளே ஸ்டாலின் போட்ட நறுக் உத்தரவு.. மோதல்!
சென்னை: பெரியாருக்கு சிலை எதற்கு என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்ட நிலையில் இன்று சட்டசபையில் பெரியார் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நீண்ட நேரம் பேசினார். அதோடு அவரின் பிறந்த நாள் குறித்து முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
Recommended Video
பெரியாரின் புகழை தேசிய அளவில் கொண்டு செல்லும் முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. முக்கியமாக இவரின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் திட்டத்தில் அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு தி.க. கி. வீரமணியின் சுயமரியாதை பிரசார நிறுவனம் பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பெரியாருக்கு சில உள்ள போதிலும் அவரின் கருத்துக்களை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக திருவள்ளுவர் சிலைக்கு இணையாக பெரிய சிலையை அமைக்கும் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அனுமதியை நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்து இருந்தார்.

கண்டனம்
இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், பெரியாருக்கு எதற்கு 100 கோடி ரூபாயில் சிலை வைக்க வேண்டும். நீங்களே யோசித்து பாருங்கள். 135 அடி உயரத்தில் சிலை வைக்க போகிறார்கள். பெரியார் யார்? பெயர் வைக்க காசு வாங்க கூடியவர் பெரியார் . வீட்டிற்கு வந்தால் சாப்பிட்டுவிட்டு காசு கேட்பவர். தன் மீது செருப்பு வீசியவரிடம் இன்னொரு செருப்பை கேட்டவர். அப்படி காசு சிக்கனமாக இருந்து சேர்த்தவர் பெரியார்.

கட்டணம் இல்லாத பயணம்
பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணம் கொடுக்க காரணம் வறுமை. இலவச அரிசி கொடுக்க காரணம் வறுமை. இந்த வறுமையை ஒழிக்க வந்த தலைவர்தான் பெரியார். அவருக்கு போய் சிலை எதற்கு மக்களின் வறுமையை போக்க பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு ரூ100 கோடியில் எதற்கு சிலை? மோடி குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்தார். இதற்கும் இப்போது ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பிற்கு என்ன மாறுதல் இருக்கிறது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

பெரியார்
பெரியாருக்கு ஏன் இப்போது சிலை. அவருக்கு என்று இல்லாத சிலையா? தமிழ்நாடு முழுக்க சிலை இருக்கிறதே. எங்கள் ஊரில் பெருமைக்கு எருமை மேய்கிறார்கள் என்று சொல்வார்கள். அதுதான் இது. இதற்கு பெயர் பணத்திமிர். அதிகார கொழுப்பு.பெரியார் இருந்தால் அவரே இதை விரும்ப மாட்டார். தன்னுடைய கம்பால் அவரே விரட்டி விரட்டி அடித்து இருப்பார். இதை பேசினால் திராவிடத்திற்கு எதிராக பேசுகிறார்கள். திராவிடம் என்றால் எரிகிறதா என்று கேட்பார்கள்.

ஆம்
ஆம் திராவிடம் என்றால் எரிகிறது. இத்தனை வருடம் நீங்கள் கொள்ளை அடித்தீர்களே.. உங்களுக்குத்தான் தமிழர் என்று சொன்னாலே எரிகிறது என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பெரியாரின் பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார்.

அறிவிப்பு
இந்தியா முழுமைக்கும் சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். மற்றவர்கள் பேச தயங்கியதை, எழுத தயங்கியதை எழுதியவர் பெரியார். எதற்கும் அஞ்சாமல் சமூக நீதிக்காக கடைசி நொடி வரை போராடியவர் பெரியார். சமத்துவத்தை கொண்டு வந்த பகலவன். பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

முதல்வர் ட்வீட்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள ட்வீட்டில், தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்!, என்று குறிப்பிட்டுள்ளார்.

மோதல்
நேற்று சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு பின்பே இணையத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி இரண்டு தரப்பினரும் கருத்து மோதலில் ஈடுப்பட்டனர். அதோடு சீமானின் பெரியார் குறித்த பழைய பேச்சுக்களை எல்லாம் திமுகவினர் டிரெண்ட் செய்தனர். பதிலுக்கு தமிழ்நாடு கடனில் இருக்கும் போது இந்த சிலை தேவையா என்று திமுகவினர் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில்தான் இன்று முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு இணையத்தில் இரண்டு கட்சிக்கும் இடையிலான விவாதத்தை பெரிதாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications