ஒரு பக்கம் சிலை.. மறுபக்கம் "சமூக நீதி நாள்".. பெரியார் பிறந்தநாளுக்காக முதல்வர் அதிரடி அறிவிப்பு
சென்னை: பெரியாரின் பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்தே பெரியாரின் கருத்துக்களை மக்கள் இடையே கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடங்களில் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் பல இடங்களில் அவமதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அப்போதே திமுக தரப்பு பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், சிலைகளுக்கு செய்யப்படும் அவமதிப்புகளை தடுக்க வேண்டும். சிலையை அவமதிப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தி.க. கி. வீரமணியின் சுயமரியாதை பிரசார நிறுவனம் பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதையடுத்து தற்போது பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாட போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார்.

இந்தியா
இந்தியா முழுமைக்கும் சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். மற்றவர்கள் பேச தயங்கியதை, எழுத தயங்கியதை எழுதியவர் பெரியார். எதற்கும் அஞ்சாமல் சமூக நீதிக்காக கடைசி நொடி வரை போராடியவர் பெரியார். சமத்துவத்தை கொண்டு வந்த பகலவன்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் செல்லாமல் சட்டங்களை மாற்ற செய்தவர் பெரியார். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான அனைத்தையும் எதிர்க்க கூடியவர் பெரியார். மக்களிடையே நிலவும் சமத்துவத்திற்கும், எழுச்சிக்கும் பெரியார்தான் காரணம். அவரை என்றும் திராவிட முன்னேற்ற கழகம் போற்றி புகழும்.

பிறந்த நாள்
பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை பற்றி பேசவேண்டும் என்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். இதனால் அவரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications