ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜக திட்டம்: கி.வீரமணி
புதுச்சேரி: தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடித்த சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
குலக்கல்வி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்பட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, "தமிழ்நாடு எப்போதுமே ஓர் அமைதிப் பூங்கா. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு வந்தவர் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தான். தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற தாக்குதலில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது. பாஜகவினர் இதே போன்று பல நேரங்களில் செய்து தங்களுக்கு பெருமை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் தெளிவாக சமூக வலைதளங்களில் வந்துள்ளன. எனவே அந்த கோணங்களில் மட்டுமே தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
ஆளுநர் பல இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனரே தவிர இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதில்லை. பாஜகவினர் அரசியல் திருப்பங்களை உண்டாக்கவும், தமிழக அரசு மீது பழி போடலாம் என்றும் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கி.வீரமணி, "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகிறோம் என்று கூறிவிட்டு அந்த இட ஒதுக்கீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்ற நிலை இருக்கிறது. இதைவிட பெண்களை ஏமாற்றும் மோசடி குற்றம் வேறு ஏதும் இல்லை. பெண் இனம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒரே பதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவற்றை நிறைவேற்றுவோம் என சோனியா காந்தியே கூறியுள்ளார்.
பாஜக அரசு விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் குலத் தொழிலை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது. சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை நாள்தோறும் அறிவிக்கும் பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications