கோடை காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நேரம் மாற்றம்? தமிழக அரசுக்கு திட்டக்குழு பரிந்துரை
சென்னை: பருவ நிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைப்பது வாடிக்கையாக உள்ளது.இன்னும் தை மாதமே முடியவில்லை.. அதற்குள்ளாகவே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி குறைந்து வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. மார்ச் மாதம் முதல் கோடை காலத்தில் வெயில் அதிகமாகவே இருக்கிறது.இந்நிலையில் கோடை காலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம் என தமிழக அரசுக்கு திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு கோடை வெயில் மிக கடுமையாக இருந்தது. பொதுவாக மார்ச் முதல் வாரம் தொடங்கும் கோடை வெயில் ஜூன் மாதத்தில் முடிந்துவிடும்.ஆனால் கடந்தஆண்டு ஜூலை மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு கூட ஜூன் 2ம் வாரம் வரை தள்ளிப்போனது.தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பின்னரே வெயிலின் தாக்கம் சற்று குறையும்.அதுவரையில் கடுமையான கோடை வெயிலால் மக்கள் அவதிப்படுவார்கள்.தமிழ்நாட்டினை பொறுத்தவரை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி வரை சுமார் 900 கிமீ தூரத்திற்கு மேல் நீண்ட கடற்கரை காணப்படுகிறது. கடுமையான கோடை வெயில் காரணமாக வங்ககடலில் கடல் நீர் அதிகளவில் ஆவியாகி, ஈரப்பதத்தை உருவாக்கி வெப்ப பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாகவே தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலங்களில் மக்கள் சரியாக வேலைக்கு செல்ல முடியாதது ஒருபுறம் எனில், மக்கள் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.இதன் காரமணாக பொருளாதார இழப்பும் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழக அரசின் திட்டக்குழு, கடந்த ஆண்டு சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதன்படியே கடந்த வெப்ப அலையை மாநில பேரிடராகவும், வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமும் வழங்கியது தமிழக அரசு.
இதனிடையே இந்த ஆண்டு கோடை காலம் இன்னும் துவங்கவில்லை.. மாசி மாதம் இறுதியில் அதாவது மார்ச் மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும். வெப்ப தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநில திட்டக்குழு தமிழக அரசுக்கு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் விவரம்: தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை இருக்கிறது. இதுவே வெப்ப அலை அதிகம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. வெப்பத்தால் கடல் நீர் அதிகளவில் ஆவியாகி, ஈரப்பதத்தை உருவாக்கி வெப்ப பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பத்தைவிட இரவு நேர வெப்ப சலனத்தால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகளவில் நீர் அருந்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மிக முக்கியமாக அரசு, தனியார் மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களின் ஊழியர்களும் வெப்ப தாக்கத்துடன் நேரடியாக பணியாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். எனவே அவர்களுக்கான பணி நேரத்தை முழுவதும் மாற்றி அமைக்க வேண்டும்.
ஊழியர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதிய அளவு தண்ணீர் வைத்து இருக்க வேண்டும். கழிப்பறை வசதியை கட்டாயம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். கால்நடைகள் நிழலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். கான்கிரீட் கட்டிடம் இல்லாத அனைத்து பள்ளிகளில் வகுப்பறை மேற்கூரையில் கூலிங் சீட் அமைக்க வேண்டும். வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். காட்டுத்தீ ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை எழிலகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரம் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மார்ச் இறுதிக்குள் செயல்திட்டத்தை இறுதி செய்து அதன்படி வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications