பாஜக கூட்டணிக்கு எடப்பாடி வரனும்னு மோடிக்கு ஆசை! அதான் ஓபிஎஸ்-ஐ அழைக்கவில்லை! பத்திரிகையாளர் கணிப்பு
சென்னை: பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று ஆசை இருப்பதால் தான் திருப்பூர் பல்லடம் கூட்டம் உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓ பன்னீர் செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காமல் தவிர்க்கிறார் என்று பத்திரிக்கையாளர் குபேந்திரன் கணித்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் புதிய கூட்டணி உருவாக்க திட்டமிட்டு வருகின்றன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும் பாஜகவும் பேசி வருவதாக தெரிகிறது. ஆனால், இதுவரை கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய கட்சிகளை நடத்தி வரும் ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணி தலைவர்கள் நேற்று முன்தினம் ஒரே மேடையில் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண், என் மக்கள்' யாத்திரை நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று ஊகிக்கப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் முதல் ஆளாக ஓ. பன்னீர் செல்வம் அட்டெண்டன்ஸ் போடுவார். ஆனால் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியது.
ஓ பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் ஒவ்வொரு முறை செய்தியாளர்களை சந்திக்கும் போதும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் நேற்று முன்தினம் மற்ற கூட்டணி கட்சியில் இருந்து பாஜகவில் வந்தவர்கள் எல்லாம் பாஜகவின் திருப்பூர் பல்லடம் கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். ஆனால் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லி வரும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக்கு எடப்பாடி வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதால் தான் ஓ பன்னீர் செல்வத்தை மேடைக்கு அழைக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- எப்படி இருந்தாலும் ஓ பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் பாஜக கூட்டணிக்கு வரத்தான் போகிறார்கள். பிறகு ஏன் அவர்களை கூப்பிட வேண்டும்.
வீட்டு வாசலிலே காத்து கிடக்கின்றார்கள்.. நான் எதற்கு உங்களை பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் எங்க வீட்டுக்குள் வரத்தான் போகிறீர்கள். வராதவர்களை தானே கூப்பிட வேண்டும். இதற்கு தான் காத்து இருக்கிறார்கள். பிரதமர் மோடி ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்காமல் இருப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியை பாஜக கூட்டணிக்கு வரை வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இல்லையென்றால் இப்படி பேசுவாரா?..
எம்ஜிஆர் நல்லாட்சி தந்தார். அதன் பிறகு ஜெயலலிதா நல்ல ஆட்சி தந்தார் என்று ஏன் பிரதமர் மோடி பேச வேண்டும். இதே மோடி, ஜெயலலிதா இருக்கும் போது 2014 ஆம் ஆண்டு மோடியா? லேடியா? என்று ஏன் கேட்க வேண்டும். ஊழல் செய்த கட்சியாக அதிமுக இருக்கிறது என்று ஏன் மோடி பேசினார். அமித்ஷாவும் அதிமுகவை ஊழல் கட்சி என்று பேசியுள்ளார். இப்படி எல்லாம் பேசிவிட்டு இன்று ஏன் அதிமுக நல்லாட்சி கொடுக்கிறது என்று பேசுகிறார்.
ஏன் என்றால் எடப்பாடியை எப்படியாவது பாஜகவுக்கு வர வைக்க வேண்டும் என்று தான். ஜன்னல் திறந்து வைத்து இருக்கிறோம். கதவு திறந்து வைத்திருக்கிறோம். வீட்டை எழுதி கொடுக்கிறோம் என என்னவெல்லாமோ சொல்லியிருப்பார்கள். ஆனாலும் எடப்பாடி வர மறுக்கிறார். எனவே ஓ பன்னீர் செல்வத்தை மேடைக்கு ஏற்றியிருந்தாலோ? ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து இருந்தாலோ எடப்பாடி பழனிசாமி கோபித்துக்கொள்வாரோ என்று தான் சந்திக்கவில்லை. எடப்பாடியின் கோவத்தை சம்பாதிக்க கூடாது என்பதற்காகவே தான் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுக்கிறார் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.
மோடிக்கு நன்றாக தெரியும்: மேலும் அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஏன் வர மறுக்கிறார் என்பது மோடிக்கு நன்றாக தெரியும். அதிமுக ஊழல் செய்த கட்சி தான்.. ஜெயலலிதா சிறைக்கு சென்றவர் தான். என்று அண்ணாமலை கூறுகிறார். அதே சமயம் மோடி அதிமுகவை பாராட்டுகிறார். அப்போது இதனை அதிமுக தொண்டர்கள் எப்படி பார்ப்பார்கள். எம்ஜிஆரை பாராட்டுவதாலும், ஜெயலலிதாவை பாராட்டுவதாலும் ஓட்டு விழுந்துவிடுமா? சத்தியமாக விழாது.
எடப்பாடி தப்பித்து விட்டார்: உங்களை வேஸ்ட் லக்கேஜ் என்று தானே சொல்கிறார்கள். பாஜகவின் தயவினால் 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தது உண்மை தான். அதற்கு நன்றிக்கடனாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு. ஆனால், எடப்பாடி என்ன சொல்கிறார் என்றால், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவே அழிந்து விடும் என்று கூறுகிறார். உதாரணத்திற்கு சிவசேனா, நிதிஷ் குமார் கட்சி இருக்கிறது.
உறவாடி கட்சியை அழித்துவிடுவீர்கள் என்று கூறி இந்த முறையோடு போதும் என்று தப்பித்து விட்டார் எடப்பாடி. பாஜகவில் இருந்தால் ஓட்டு விழாது என்று எல்லாருக்கும் தெரியும். அதிமுக என்ற சாப்ட் இந்துத்துவா கட்சியை கபளீகரம் செய்வதற்காக பாஜக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வாய்ப்பை எடப்பாடி கொடுத்தால் அதனை வரலாறு மன்னிக்காது. அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் பாஜகவை விட்டு எடப்பாடி விலகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications