”திரௌபதி”க்கு பாமக ஆதரவு ஏன்? அவர் முன்பாகவே மேடையில் அன்புமணி ஓபன் டாக்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரக்கு ஆதரவளித்ததற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

சென்னையில் திரௌபதி முர்மு
இந்த நிலையில் இன்று திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அன்புமணி ஆதரவு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பாமக சார்பில் தனது ஆதரவை அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், "பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தளம் சமூகநீதி தான். அதனால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை முதன்முதலாக ராமதாஸ் அறிவித்தார்.

ஏன் ஆதரவு
திரௌபதி முர்மு பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன்முறையாக குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார். அடுத்து அவர் பெண்மணி. அந்த அடிப்படையில் தான் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் ஆதரவை வழங்கியது. பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் என்பதைக் கடந்து பொது வேட்பாளராக அனைவரும் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

திரௌபதி நன்றி
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளித்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் திரௌபதி முர்மு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவரும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான ஜி.கே.மணி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications