காலாவதியாகுதே..ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனே ஆளுநர் ஒப்புதல் தரனும்..அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் தர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்தன. இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியது. இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்போது ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி, போக்கர் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. அதேநேரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒப்புதல் தராத ஆளுநர்
இந்த மசோதா தொடர்பாக விளக்கம் தருவதற்கும் தமிழக அரசு தரப்பில் ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கேள்விகளுக்கு தமிழக அரசும் 24 மணிநேரத்தில் பதில் அனுப்பியது. இருந்தபோதும் இம்மசோதாவுக்கு இன்னமும் ஒப்புதல் தரப்படவில்லை.

காலவதியாகும் நிலை
இதனால் தமிழக அரசின் அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.

32 பேர் தற்கொலை
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசரசட்டம் காலாவதியாகிறது! ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

ஆளுநருக்கு வேண்டுகோள்
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications