அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்?
சென்னை: அதிமுக மற்றும் பாமக கூட்டணி நாளை உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக நாளை பொதுவான ஒரு இடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் அதிமுக தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆலோசனை
அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பியூஷ் கோயல்
அதே போல் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வீட்டிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னைக்கு அமித்ஷாவும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலும் வருகின்றனர்.
தொகுதி பங்கீடு
அப்போது அதிமுக- பாஜக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதுபோல் நாளை அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகிறது உள்ளிட்டவை குறித்து அமித்ஷா வெளியிடுவார் என்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
பாமக நிறுவனரும் சந்திப்பு
அதற்கு முன்னதாக சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அதிமுக தலைவர்களும் பியூஷ் கோயலும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது போல் நாளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுவான இடத்தில் சந்தித்து பேசுவார் என தெரிகிறது.