Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி!
சேலம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பிராசராம் முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கும் போது திடீரென மயக்கம் அடைந்தார். அப்படியே சரிந்த போது அங்கு நின்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக அவரை தாங்கி பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேடையிலேயே ராமதாஸ் மயக்கமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
86 வயதான ராமதாஸ், மகன் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ் சேலம் உள்பட பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று தான் தனது பிரசாரத்தை தொடங்கி இருந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டுவிட்டு கீழே இறங்க நின்றபோது திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை மகன் மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. தற்போது இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றார்கள். இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் என சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையான பாமக நாங்கள் தான் என கூறி வந்த அன்புமணி ராமதாஸ் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எண்டிஏ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். அவருக்கே மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சி மற்றும் சின்னத்தை மீட்க போராடிய ராமதாஸின் முயற்சி பலன் அளிக்கவில்லை. பின்னர் சின்னத்தை முடக்கும் முயற்சியும் ராமதாசுக்கு தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். வேட்பாளர்களையும் ராமதாஸ் அணி அறிவித்து இருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் சசிகலாவும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று முதல் ராமதாசும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தாங்கி பிடித்துக்கொண்ட தொண்டர்கள்
சேலம் பள்ளப்பட்டியில் போட்டியிடும் அருளை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ராமதாஸ், துரோகிகள், துரோகம் எப்போதும் வெற்றி பெறாது.. என்று பேசினார். மேலும் மேடையில் அமைதியாகவும், கோபத்துடனேயே அமர்ந்து இருந்தார். பிரசாரத்தில் பேசிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்க முயன்றபோது திடீரென அவர் மயக்கமடைந்தார். அப்போது அவரை சுற்றி நின்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனே அவரை தாங்கி பிடித்தனர்.
இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து ராமதாசை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரச்சார மேடையிலேயே ராமதாஸ் மயக்கமடைந்து சரிந்து விழுந்தது அங்கிருந்த தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு ராமதாஸ் உடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி, வேட்பாளர் அருள் ஆகியோர் சென்றுள்ளனர். தற்போது ராமதாசுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications