போராடிய மாணவிகளை பழிவாங்குவதா? பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை நீக்க வேண்டும்.. ராமதாஸ் ட்வீட்!
பெரியார் பல்கலைக்கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தரை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் கேள்வித்தாள் சர்ச்சை விவகாரம், உதவி பேராசிரியர் சர்ச்சை விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் 5 பேரின் நடத்தை சான்றிதழில் திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் பதிவு
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், அநீதிக்கு எதிராக போராடிய மாணவிகளை பழிவாங்கும் நோக்கில் நன்னடத்தை சான்றிதழில் திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்க பதிவில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பழிவாங்கும் போக்கை எதிர்த்து போராடிய 5 மாணவிகள் மீது நிர்வாகம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

பழிவாங்கப்படும் மாணவிகள்
அவர்களின் நடத்தைச் சான்றிதழில் "Not Satisfactory" என்று குறிப்பிட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கத் துடிக்கிறது. பழிவாங்கப்படும் மாணவிகள் செய்த ஒரே தவறு. உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீது பல்கலைக்கழக நிர்வாகம் சுமத்திய பாலியல் புகார் பொய்யானது. பழிவாங்கும் செயல் என்று மாவட்ட ஆட்சியரிடமும், ஊடகங்களிடமும் அம்பலப்படுத்தியதும், நீதிகேட்டு போராடியதும் தான்.

துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நூற்றுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசே அவரது நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் துணைவேந்தரின் பழிவாங்கும் செயல்கள் தடையின்றி தொடருவதை அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

துணைவேந்தரை நீக்குக
பாதிக்கப்பட்ட மாணவிகளின் நன்நடத்தை சான்றிதழை திரும்பப் பெற்று புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications