இறக்குமதி மணல் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும்.. தமிழக அரசு இந்த தப்பை செய்ய கூடாது.. ராமதாஸ் சாடல்
சென்னை: மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு, 15 புதிய மணல் குவாரிகளை திறப்பது என்பது தமிழக சுற்றுச்சூழலை முற்றிலுமாக சீரழித்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், உள்ளூர் மணலின் விலையை விட இறக்குமதி மணலின் விலை 5 மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட, அதன் விற்பனையைத் தான் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை அதிகமாக இருப்பதால் மாநிலம் முழுவதும் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமதாஸ் அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டின் கட்டுமானத் தேவைகளுக்கான ஆற்று மணலின் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, மாநிலம் முழுவதும் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. புதிய மணல் குவாரிகளை திறப்பது எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.

இறக்குமதி மணல் விலை குறைவு தான்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை உயர்ந்து விட்டதும், அந்த விலைக்கு இறக்குமதி மணலை வாங்க எவரும் தயாராக இல்லை என்பதும் தான் மணல் இறக்குமதிக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்வதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல. 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி கொரோனா தொற்று பரவல் தொடங்கும் வரை மொத்தம் 5.20 லட்சம் டன் மணல் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மணல் முழுவதும் ஒரு யூனிட் ரூ.10,000 என்ற விலைக்கு விற்றுத் தீர்ந்து விட்டது. மணல் விற்பனை அண்மைக்காலமாக குறைந்திருப்பதற்குக் காரணம் கொரோனா தொற்றால் கட்டுமானப் பணிகள் முடங்கியிருப்பது தானே தவிர, அதிக விலையால் அல்ல. தமிழ்நாட்டின் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் ஆற்று மணல் யூனிட்டுக்கு ரூ.12,000 வரை விற்கப்பட்ட நிலையில், இறக்குமதி மணல் விலை அதை விடக் குறைவு தான்.

சுற்றுச்சூழல் பாதிப்பு
ஒருவேளை, இறக்குமதி மணலுக்கான தேவை குறைந்து விட்டதாக வைத்துக் கொண்டாலும் கூட, அது தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கான காரணமாக இருக்க முடியாது. மாறாக, ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்காகத் தான் மணல் இறக்குமதியைத் தமிழக அரசு திட்டமிட்டுக் கைவிடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குவாரிகளை அமைத்து மணல் எடுப்பதால், ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, உள்ளூர் மணலின் விலையை விட இறக்குமதி மணலின் விலை 5 மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட, அதன் விற்பனையைத் தான் அரசு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளத்திற்குக் கொண்டு சென்று விற்கப்படும் ஒரு சரக்குந்து மணலின் விலை ரூ.50,000 என்ற உச்சத்தைத் தொட்ட போதிலும், அம்மணலைப் பயன்படுத்துவதைத் தான் கேரளம் ஊக்குவித்ததே தவிர, மணல் குவாரிகளை அனுமதிக்கவில்லை. காரணம்... சுற்றுச்சூழல் மீது கொண்டுள்ள அக்கறை.

வழக்கு தொடர்ந்த அன்புமணி
தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன. மணல் குவாரிகளுக்கு எதிராகப் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப் பட்டு, இப்போது ஒட்டுமொத்தமாகவே 7 ஆற்று மணல் குவாரிகள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.

சிலரது லாபம்
அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை யாரோ சிலரின் லாபத்துக்காக மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவித்து விடும். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குவாரிகள் அமைத்து 60 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் கடல் நீர் ஊடுருவி விட்டது; பல ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாசன நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மணல் கொள்ளையால் ஆற்று மட்டம் குறைந்து, அதில் எவ்வளவு நீர் ஓடினாலும் பாசனக் கால்வாய்களில் நீர் பாய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இவை உள்ளிட்ட ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதென்பது பெரும் தீமையாகும்.

அரசுக்கு லாபம் இல்லை
ஆற்று மணல் குவாரிகளை திறப்பதால் அரசுக்குப் பொருளாதார ரீதியாகவும் எந்த பயனும் கிடைக்காது. 2003&ஆண்டு ஆற்று மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெரும்பாலான ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் அரசுக்குச் சராசரியாக ரூ.80 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. மாறாக இடைத்தரகர்கள் தான் பல்லாயிரக்கணக்கான கோடி லாபம் பார்க்கின்றனர். ரூ.80 கோடி லாபத்திற்காக விலைமதிப்பற்ற சுற்றுச்சூழலை அழித்து விடக்கூடாது. மாறாக, மணல் இறக்குமதியை ஊக்குவிப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய், கட்டுமானத்திற்குத் தடையற்ற மணல் வினியோகம் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

முடிவைக் கைவிட வேண்டும்
எனவே, மணல் இறக்குமதியை நிறுத்தி விட்டு, 15 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தின் ஆறுகளில் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வேண்டும். மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்குத் தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
‘அய்யா பாமக’.. ராமதாஸ் அணியின் புதிய கட்சி! தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. தலைவர் யாரு பாருங்க? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications