அன்புமணி Vs ராமதாஸ்.. பாமகவின் ’மாம்பழம்’ யாருக்கு? எல்லாத்தையும் ‘மேல’ இருக்குறவங்க பாத்துப்பாங்க!
சென்னை: திட்டமிட்டபடி இன்று பாமகவின் பொதுக்குழுவை நடத்தி இருக்கிறார் அந்த கட்சியின் நிறுவனரான ராமதாஸ். அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நிலையில் பொதுக்குழு அன்புமணியை கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் பழமை வாய்ந்த கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு ஞாயிற்றுக்கிழமை தான் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டது.
வன்னியர் சங்கத்தை அரசியல் படுத்த அதனை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி இருந்தார் நிறுவனர் ராமதாஸ். தொடர்ந்து இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ராமதாஸ், திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், தேசிய அளவில் பாஜக,காங்கிரஸ்உடன் கூட்டணி வைத்தும் தனது கட்சி உறுப்பினர்களை எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாகவும் மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

ராமதாஸ்
அந்த வகையில் தனது மகன் அன்புமணியை சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கினார் ராமதாஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மகன் அன்புமணியை தலைவராகவும் ஆக்கினார். அதற்கு பிறகு தான் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. தமிழக முழுவதும் சுற்றுப்பயணம், பொதுக்குழு கூட்டம் என அன்புமணி ராமதாஸ் பிஸியாக இருக்கும் நிலையில் வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாக தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது/ உங்களை மதிக்காமல் செயல்படுகிறார் என சிலர் ராமதாஸ் தரப்பை தூண்டி விட தன் இறுதி காலம் வரை கட்சியின் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ராமதாஸ் நினைப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அன்புமணி
அதே நேரத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை நான் தான் எடுப்பேன் என அன்புமணி ராமதாஸ் கூற, அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். கட்சியிலிருந்து ஏற்கனவே விளக்கி வைக்கப்பட்டவர்கள் சிலரையும் தனது ஆதரவாளர்களையும் செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் ஆக்கினார் ராமதாஸ்.
பாமக பொதுக்குழு கூட்டம்
இந்நிலையில், கடந்த வாரம் அன்புமணி ராமதாஸின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 2026 வரை அன்புமணி தான் தலைவர், கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் அன்புமணிக்கு தான் இருக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று பாமக நிறுவனர் பொதுக்குழுவை நடத்தி இருக்கிறார். அதில் கூட்டணி தொடர்பான முடிவை ராமதாஸ் தான் எடுப்பார், அன்புமணிக்கு கண்டனம் என 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
யாருக்கு அதிகாரம்?
இந்த தீர்மானங்கள் அன்புமணியை கட்டுப்படுத்துமா? யார் உண்மையான பாமக? என்ற கேள்வி தொண்டர்களிடையேயும் தமிழக மக்களிடையேயும் எழுந்திருக்கிறது. கடந்த பொதுக்குழுவின் படி கட்சியின் தலைவரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். மேலும் பொருளாளர், பொதுச் செயலாளரையும் பொதுக்குழு நிர்வாகிகளே தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்கு பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களில் அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
அன்புமணிக்கு தான் அதிகாரம்?
பாமக விதி 161ன் படி கட்சியின் தலைவரும், பொது செயலாளரும் இல்லாத கூட்டங்கள் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ராமதாஸ், பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்திருந்தாலும் அவர்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த வகையில் பொதுக்குழுவாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணிக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்கிறது கட்சி விதி.
தேர்தல் ஆணையம்
அதே நேரத்தில் கட்சி நிறுவனருக்கு என சில அதிகாரங்கள் இருக்கும் நிலையில் அது அன்புமணியை கட்டுப்படுத்துமா? என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications