பாஜக உள்ள வந்துருச்சு ப்ரோ.. தைலாபுரத்தில் குருமூர்த்தி என்ட்ரி! டாக்டரிடம் என்ன பேசினார் ஆடிட்டர்?
சென்னை: பாமகவின் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாமக விவகாரத்தில் பாஜக தலையீடு இருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரடியாக சென்று ராமதாஸை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக விவகாரங்களிலும் குருமூர்த்தி தலையிட்டது குறிப்பிடத்தக்கது.
எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய அரசியல் தலைவராகி இருப்பவர் ராமதாஸ். மருத்துவராக தனது வாழ்க்கையை தொடங்கியவர், அதற்கு பிறகு வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்ட போதிலும், இதுவரை எந்த அரசு பதவியையும் ஏற்காதவர்.
அதே நேரத்தில் பல்வேறு சமூகங்களில் இருந்து எம்பி, எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கியவர். இந்த நிலையில் கட்சியின் எதிர்காலம் கருதி தனது மகனான அன்புமணி ராமதாசை அரசியலுக்கு அழைத்து வந்தார்.

இளம் வயதிலேயே மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் நிலவியது. தந்தை மகன் இடையேயான மோதல் கட்சி நிர்வாகிகளை தூக்கி அடிப்பது வரை வந்து நின்றது. மற்ற கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டு நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியோ உட்கட்சி பூசலில் சிக்கி தவித்ததால் அதிருப்தி அடைந்தனர் நிர்வாகிகள்.
இந்த நிலையில் தான் இன்று மோதல் முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ராமதாசை மகன் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து பேசினார். வழக்கமாக வியாழக்கிழமைகளில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என்பதால் இன்றும் ஏதாவது ஒரு நல்ல அறிவிப்பு வரும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக முன்னாள் மேயரான சைதை துரைசாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் சந்தித்து பேசினர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தான் பேசவில்லை எனவும், நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக பாஜக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். அதற்காக பாஜகவே ராமதாசை சந்திக்க குருமூர்த்தியை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேரடியாக பாஜக நிர்வாகிகள் சென்றால் பாமக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுகிறது என்ற தோற்றம் பொதுவெளியில் வரும் என்பதன் காரணமாகவே ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பியதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களிலும் அதிமுக விவகாரங்களில் ஆடிட்டர் குருமூர்த்தி பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஓபிஎஸ் இபிஎஸ் 2017 மோதலுக்கு பிறகு இணைந்த போது ஆடிட்டர் குருமூர்த்தியின் பங்கு அதிகமாக இருந்தது.
மேலும் தனது குருநாதரான சோவின் வழியை குருமூர்த்தி பின்பற்றுகிறார் என்கின்றனர். கடந்த காலங்களில் தமிழகத்தில் திமுக தவிர்த்து பிற கட்சிகளில் ஏதாவது சலசலப்புகள் ஏற்பட்டால் அதனை சோ தான் தீர்த்து வைப்பார். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஒரு ஆலோசகர் போலவே செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தற்போது குருமூர்த்தி பாஜகவுக்கு நேரடி ஆதரவு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் பாஜகவின் தூதர் போலவே பிற கட்சி விவகாரங்களில் அவர் கலந்து கொள்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications