1993ல் பண்ருட்டி ராமசந்திரன் செய்தது நினைவிருக்கா? அரசியல் ஆதாயம் தேடும் திமுக? முடிவு அப்பாவு கையில்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது சட்டமன்றம் வரை சென்றுள்ள நிலையில், 1993 ஆம் ஆண்டில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவம் நினைவுகூரப்படுகிறது.
அண்மைக்காலமாகப் பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே. அதிகாரத்தை முழுமையாகத் தன் கையில் எடுத்துக்கொள்ள அன்புமணி முனைவதாகப் பேசப்படுகிறது. ஆனால், அன்புமணிக்கு அதிகாரம் கொடுத்ததால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்று ராமதாஸ் கருதுகிறார். இதன் எதிரொலியாக, பாமக தலைவர் பதவியை அன்புமணியிடமிருந்து ராமதாஸ் பறித்தார். இதையடுத்து, இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமிப்பதும் நீக்குவதுமாக இருந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சட்டமன்றப் பாமக எம்.எல்.ஏ.க்களின் கொறடாவாக உள்ள அருளை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அன்புமணி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளித்தது. அதேபோல், அருள்தான் கொறடா, அவரை நீக்கக் கூடாது என ராமதாஸ் தரப்பும் அப்பாவுவிடம் மனு கொடுத்துள்ளது. இதில் சபாநாயகர் அப்பாவு என்ன செய்யப் போகிறார் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கு ஒரு முன்னுதாரணமும் உள்ளது.
1993 பண்ருட்டி ராமச்சந்திரன் வழக்கு: ஒரு வரலாற்றுப் பாடம்
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், மின்னம்பலம் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: 1991 ஆம் ஆண்டு ராமதாஸ் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சி முதல்முறையாக மாநிலத் தேர்தலைச் சந்தித்தது. பண்ருட்டி தொகுதியில் எஸ். ராமச்சந்திரன் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் தேவசுந்தரத்தைத் தோற்கடித்தார். அதுதான் பாமகவின் முதல் சட்டமன்ற வெற்றி. அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே இருந்தார்.
மோதல் போக்கு
இந்த நிலையில், 1993 ஆம் ஆண்டு ராமதாஸுக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், ராமதாஸுக்கு எதிராக ஒரு போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றினார். அதாவது, தனது தலைமையிலான பாமகதான் உண்மையானது என அங்கீகரிக்கக் கோரி பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.
சபாநாயகர்
அப்போது சபாநாயகராகச் சேடப்பட்டி முத்தையா இருந்தார். அவர் பாமக இரண்டாக உடைந்ததாக ஒரு முடிவை எடுத்தார். அது ஒரு வகையில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருந்தது. அதாவது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ராமதாஸுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை. இதனால், சட்டமன்றத்திற்குள் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான பாமகவும், வெளியே ராமதாஸ் தலைமையிலான பாமகவும் செயல்பட்டன.
சபாநாயகரின் நிலை
தற்போதைய சூழலில் சபாநாயகரின் நிலை
எனவே, தற்போதைய அருள் விவகாரத்திலும் சபாநாயகர் அப்பாவு, ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்தவர். எப்போதுமே அரசியல் அனுகூலமுள்ள முடிவைத்தான் எந்தக் கட்சியாக இருந்தாலும் எடுக்கும். அந்த வகையில், அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என்ற முடிவை அப்பாவு எடுக்க வாய்ப்புள்ளது.
ராமதாஸ் பாமக
சபாநாயகர் முடிவெடுத்தால், தேர்தல் ஆணையம் உடனே முடிவெடுக்க முடியாது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், சபாநாயகர் முடிவுக்குத் தடை கொடுக்க முடியாது. ஒருவேளை பாமக இரண்டாக உடைந்தால், ராமதாஸ் தலைமையிலான பாமகவை தங்களுடன் கூட்டணியில் இணைத்து வன்னியர் வாக்குகளை அறுவடை செய்யலாம் என திமுக கணக்குப் போட்டுள்ளது. எனவே அப்பாவு என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்றும் தராசு ஷ்யாம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications