மகள் வேறு.. மருமகள் வேறா? சௌமியாவுக்கு ஒரு நீதி.. காந்திக்கு ஒரு நீதியா? குழம்பி குழப்பும் ராமதாஸ்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்இன்று பாமக செயற்குழுவை கூட்டினார் ராமதாஸ். அதில் அவரது மகள் காந்தி முதன்முதலாக அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது குடும்பப் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் தற்போது மகளை மேடை ஏற்றியது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து செயல் தலைவராக பதவி இறக்கம் செய்தார் ராமதாஸ். ஆனால் பொதுக்குழு முடிவின்படி நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார்.
இதனால் கட்சியில் இரு அணிகள் உருவாகி இருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் விலக்குவதும், அவர்களை அன்புமணி சேர்ப்பதுமாக தொடர்ந்து சில நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகவாமா ஆகியோர் அன்புமணி ராமதாஸ் பக்கம் நிற்கும் நிலையில் அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார் ராமதாஸ். ஆனாலும் தனது ஆதரவாளர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், வட மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். கட்சி தொடர்பாக எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமதாஸ் - அன்புமணியை சமாதானம் செய்ய சில நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். அதன் வெளிப்பாடாக கடந்த சில தினங்களுகு முன்பு நடைபெற்ற பொது குழுவில் அன்புமணி தந்தை ராமதாஸிடம் நேரடியாகவே மன்னிப்பு கேட்டார். ஆனால் அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தனது மகன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அது மட்டும் இல்லாமல் தனது மனைவியை அன்புமணி ராமதாஸ் தாக்கியதாகவும், தனது குடும்பத்தில் இருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியிருந்தார்.
குறிப்பாக சௌமியா அன்புமணி அரசியல் வருகைக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிகே மணி, அருள், அருள்மொழி உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி கலந்து கொண்டார். முதன் முதலாக அவர் பாமக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
மேடைக்கு கீழே அமர வைக்கப்பட்டிருந்த அவரை சில நிர்வாகிகள் மேடையில் அழைத்து வந்து அமர வைத்தனர். அதனை வரவேற்பது போலவே ராமதாஸும் இருந்தார். அனைவருக்கும் வணக்கம் கூறிய காந்திமதி மேடையில் அமர்ந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் ராமதாஸின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள்.
மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதியா என ராமதாஸை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள். "என்னுடைய குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் அரசியல் கட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை, அந்த அடிப்படையில் சௌமியா அன்புமணி அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொன்னேன்; தர்மபுரியிலும் சௌமியா போட்டியிட வேண்டாம் என்று நான் சொன்னேன்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவரே அதனை மீறி தன்னுடைய மூத்த மகள் காந்தியை மேடை ஏற்றி இருக்கிறார். செயற்குழு கூட்டத்திற்கும் அழைத்து வந்திருக்கிறார். ஏன் இந்த முரண், ஏன் இந்த தடுமாற்றம் என அன்புமணி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications