என்னாது.. 2008ல் அன்புமணி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸுக்கு மறுபடியும் விழாவா.. கடுப்பில் பாமக
மதுரை எய்ம்ஸ்-க்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்புமணிதான் என பாமகவினர் கூறுகின்றனர்.
Recommended Video
சென்னை: செம கடுப்பில் இருக்கிறார்கள் பாமக தொண்டர்கள்.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்றும் ஆனால் அப்படி ஒரு விஷயமே இப்போது நடக்காமல் இருப்பது போல மற்ற கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன என்றும் கொதித்து போய் கூறுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது.
"மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி!" என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார்.
வேடிக்கை பார்ப்பதா?
மேலும், "மதுரைக்கு 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது!" என்றும் பதிவிட்டு கேள்வியை கேட்டிருந்தார் அன்புமணி.
ரூ.150 கோடி ஒதுக்கீடு
இதற்கு தமிழிசையும், "திரு. அன்புமணி அவர்களே... "பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன் தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை. 2008 ல் அடிக்கல் நாட்டி 150 கோடி ஒதுக்கியதாக கூறுகிறீர்கள்.
எத்தனை போராட்டம்?
அப்படி என்றால் அதன் பிறகு திமுக 3 ஆண்டுகளாக ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணியோடு இருந்திருக்கு. அப்போ இந்த வேலைய முன்னெடுக்க தவறியது தி.மு.க வும், காங்கிரஸ் கூட்டணியும் தானே? இந்த பணியை செய்யாத மத்திய மாநில அரசை கண்டித்து எத்தனை போராட்டம் பேரணி நடத்தி இருக்கிறீர்கள்?
பதிலடிகள்
திடீரென ஒரு நாள் நான்தான் எய்ம்ஸ் க்கு அடிக்கல் நாட்டினேன் என்று பத்து ஆண்டுகள் கழித்து டுவிட் செய்வதில் என்ன பெருமை வந்து இருக்கிறது? எதையும் செயல்படுத்த வேண்டும் அதுதான் சாதனை" என்று பதிலடிகளை தந்து கொண்டே இருந்தார்.
கடும் விரக்தி
இடையில் இருவருமே இந்த விஷயத்தை ஆறப்போட்டார்கள். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் பாமக தொண்டர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
அதிமுக அமைதி ஏன்?
"பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியவர் அன்புமணி ராமதாஸ் என்றும் ஆனால் தாங்கள்தான் கொண்டு வந்த மாதிரி பாஜக இந்த விஷயத்தை காட்டி கொள்வதாகவும் கொதித்து போய் கூறுகின்றனர். மேலும் இந்தவிஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அதிமுக வாய் திறக்காமலேயே அமைதி காத்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
ஒரே ஒரு வித்தியாசம்
அது மட்டும் இல்லை, அன்று அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டிய அதே பகுதியில்தான் நேற்று பிரதமரும் அடிக்கல் நாட்டிவிட்டு சென்றிருப்பது கூடுதல் கொந்தளிப்பை பாமக தரப்பில் ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம், அன்புமணி ராமதாஸ் அன்று 100 ஏக்கரில் அமைக்க இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்று 202 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அவ்வளவுதான்... என்னவோ போங்கப்பா ஒன்னுமே புரியலை.