போட்டா போட்டி.. அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தும் அதே நாளில் தைலாபுரத்தில் கூட்டத்தை கூட்டும் ராமதாஸ்
சென்னை: அன்புமணி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் பாமக நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்துகிறார். பாமக விவகாரம் பற்றி எரிந்து வரும் சூழலில் அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தும் நாளிலேயே ஆலோசனை நடத்துகிறார் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் டிசம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது வன்னியர் சமூக மக்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இத்தகைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அன்புமணி அனைத்து கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பாமக தரப்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக வழக்கறிஞர் பாலு தலைமையிலான குழு சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதிமுக சார்பில் இந்த போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். பாமக தலைவர் ஸ்ரீகாந்தி, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications