இனி அவர்களின் மிரட்டல் எடுபடாது.. பாமகவை நேரடியாக "அட்டாக்" செய்த திருமா.. "உச்சம்" எட்டிய உரசல்
பாமகவும், பாஜகவும் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என திருமாவளவன் பேசியது திமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.
சென்னை: பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்டு வந்த உரசல் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது.
இதற்கு முன்பு பாமகவை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வந்த போதிலும், இந்த முறை அவரது அரசியல் வேறு மாதிரியாக உள்ளது.
பாமகவை அரசியலில் இருந்தே ஓரங்கட்டும் யுக்தியை திருமாவளவன் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில்தான், தற்போது பாமகவை நேரடியாக அட்டாக் செய்திருக்கிறார் திருமா.

சங்கிலியை உடைத்த திருமா
முன்னெப்போதும் இல்லாததை விட சமீபகாலமாக திருமாவளவனின் அரசியல் செயல்பாடுகள் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. ஒருகாலத்தில் தலித்துகளின் கட்சி என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை, 'ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் கட்சி' என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுளார் திருமாவளவன். இதை பிரதிபலிக்கும் விதமாக, அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மாற்று சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிப்பதை காண முடிகிறது.

அனல் பறந்த பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த பரிணாமத்தையும், தனது ஆளுமையையும் உணர்ந்த திருமாவளவன், இதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வதாக தெரிகிறது. அவரது சமீபத்திய பேச்சுகளை பார்க்கும் போதே அதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு பாஜகவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அவர் பேசிய பேச்சுகள் அனல் பறந்தன. "கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுப்பவன் நான் அல்ல. பதவிக்காக சிரிப்பவன் இந்த திருமாவளவன் அல்ல. பதவி எனது தலைமுடிக்கு சமம்" என திருமாவளவன் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாமகவுக்கு செக்
மேலும், பாமகவும், பாஜகவும் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என திருமாவளவன் பேசியது திமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில், கடந்த சில மாதங்களாகவே திமுகவை பாமக நெருங்கி வருவதற்காக சமிக்ஞைகள் தென்படுகின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக பாமக சில முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்டதன் காரணமாகவே, திருமாவளவன் இப்படி பேசியதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாமக மிரட்டல் எடுபடாது
திருமாவளவனின் இந்த பேச்சால் பாமக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், இரு கட்சிகளுக்கும் மீண்டும் உரசல் ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில், பாமகவை நேரடியாக தாக்கும் வகையில் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், "திமுக கூட்டணிக்கு தாங்கள் வருவதை போல பாமக காட்டிக்கொள்வது அக்கட்சியின் ராஜதந்திரம். தேர்தல் நேரங்களில் அவர்கள் (பாமக) இப்படித்தான் முயற்சி செய்வார்கள். கூட்டணியை விட்டு வெளியே நிற்பது போல காட்டுவார்கள். இது, கூட்டணிக் கட்சியை மிரட்டும் செயல். பாமகவின் இந்த மிரட்டலும், ராஜதந்திரமும் இனி எடுபட போவதில்லை.

பாஜக - அதிமுக கூட்டணி
தமிழகத்தில் அதிமுகவின் முதுகில் ஏறி பாஜக சவாரி செய்ய பார்க்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவர வேண்டும். என்னை பொறுத்தவரை, திமுக தலைமையில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைய வேண்டும். அதற்கான முயற்சியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் பாஜக - அதிமுக கூட்டணியில் சேராது" என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications