போலீசை பார்த்து ரவுடிகள் பயப்படவில்லை.. ரவுடிகளை பார்த்து போலீஸ் பயப்படும் நிலையில் தமிழகம்- ஓபிஎஸ்
சென்னை: ‛‛தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் ரவுடிகளை கண்டு காவல் துறையினர் அஞ்சும் நிலை உள்ளது. மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் திமுக அரசின் குறைபாடுகளை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காவல்துறை அச்சம்
‛நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்' என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் அண்ணா. அவரது கூற்றிற்கு மாறான நிலைமை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. ‛அமைதி, வளம், வளர்ச்சி' என்ற சூழ்நிலை மாறி, ‛அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை' என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது. காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு கால்துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

கொலை, கொள்ளைகள்
திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும் இன்னும் சொல்லப்போனால் காவல் துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகிறது.

ஆளும் கட்சியினர் அட்டகாசம்
பல நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. விருதுநகர் ஆயத்தஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்பதை உதாரணமாக கூறலாம். இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் திமுக பிரமுகர். மாணவியின் தந்தை புகாரில் திமுக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவையெல்லாம் ஆளும் கட்சியினரால் ஏற்படும் அராஜக செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

கொடிகட்டி பறக்கும் ரவடிகள்
இதேபோல் மணல் கடத்தல் ,சாலை போடுதல் போன்ற பணிகளிலும் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தவைிரித்து ஆடுகிறது. ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அரகே ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். அண்மையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதையும் இளைஞர்கள் சீரழிந்து வருவதையும் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று தடுக்க முயன்றனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு காவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.

சட்டம் ஒழுங்கு சீரழிவு
இந்நிலையில் தான் மக்கள் நடமாட்டம் காணப்படும் சென்னை நகரின் பிரதானப்பகுதியான பாரிமுனையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் சவுந்தராஜனை மர்மகும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெ்டடி கொலை செய்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. தற்போதைய திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், குற, சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்பு வழங்கும் காவல் துறையினர் என அனைத்து தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதற்கு காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை.

இரும்பு கரம் கொண்டு...
பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது. தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது. பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இது ஒரு கெடுசூழல். எனவே பொது அமைதியை உருவாக்க வேண்டிய கடமை, சட்டம்-ஒழுங்கை சீராக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு, முதல்வருக்கும் நிச்சயம் உண்டு. சுகாதாரம், செல்வவளம், விளைபொருட்களின் வளம், இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதன்மூலம் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications