நான் ஹெல்ப் பண்றேன்.. உதவுவதாக கூறி நம்பர் வாங்கி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகி கைது!
சென்னை: பிரச்சனையை தீர்க்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெண்ணுக்கு உதவுவதாக கூறி அதிமுக நிர்வாகி செல்போன் எண் வாங்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு பிரச்சனைக்காக அங்கு வந்த அதிமுக தாம்பரம் 53 ஆவது வட்ட செயலாளர் குமரன் என்பவர் அப்பெண்ணுக்கு உதவுவதாக கூறி அவரது செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார்.

அந்தப் பெண்ணின் பிரச்சனையை தீர்க்க உதவுவதாக செல்போன் எண் வாங்கிய அதிமுக வட்டச் செயலாளர் குமரன், அப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் பேசுவதை தவிர்க்க முயன்றாலும் தொடர்ந்து அப்பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளார் அதிமுக பிரமுகர் குமரன்.
என்னிடம் இப்படி பேசாதீர்கள், போலீசில் புகார் கொடுப்பேன் என எச்சரித்தும், தொடர்ச்சியாக குமரன், அப்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டும், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக மெசேஜ் செய்தும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் உதவியுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் குமரனின் செல்போனை வாங்கி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் பல்வேறு மெசேஜ்களை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் குமரனை கைது செய்து அவரை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications