செம்மரக் கடத்தல் - சென்னை தொழிலதிபரை கடத்திய வழக்கில் தேடப்படும் தவ்பீக் கூட்டாளி கோவையில் கைது
சென்னை: சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ2 கோடி பறித்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தவ்பீக்கின் கூட்டாளி கோவையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர். அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் திவான் அக்பரை விசாரித்த ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்று ரூ2 கோடி பறித்தது.

இது தொடர்பாக திவான் அக்பர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தவ்பீக்கின் மனைவி சல்மாவும் போலீசில் சிக்கினார். இந்த நிலையில் தவ்பீக்கை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இதனிடையே கோவையில் தவ்பீக்கின் கூட்டாளி கட்ட காதர் சிக்கியுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் கட்ட காதர் தேடப்பட்டு வந்தவர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். செம்மரக் கடத்தல் விவகாரத்தில்தான் தொழிலதிபர் திவான் அக்பர் கடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications